சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது வனத்துறை சார்பில், இரவு வான் பூங்கா, ஆமை பாதுகாவலர்கள் குழு, முதலைகள் பாதுகாப்பு மையம் உள்ளிட்ட 10 புதிய அறிவிப்புகளை காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்டுள்ளார்.
சூழல் சுற்றுலா மேம்பாடு:மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளையில் உள்ள சமூக அடிப்படையிலான அமைப்புகள் மூலம் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவில், சமூக அடிப்படையிலான சூழல் சுற்றுலா ரூ.15 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
இன விதை பெட்டகம்: கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வன உயர்பயிற்சியக மரபியல் பிரிவில் பூர்வீக இன விதை பெட்டகம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
தமிழ்நாடு மரங்கள் (அரசு நிலங்கள்) பாதுகாப்புச் சட்டம் 2024 அறிவிக்கை செய்யப்படும். தமிழ்நாடு மாநில வனக் கொள்கை 2024 வெளியிடப்படும்.
டாக்டர் ஏஜேடி ஜான்சிங் வன உயிரினப் பாதுகாப்பு விருது: வன உயிரின பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை அளித்த வன உயிரின ஆர்வலர் ஒருவருக்கு டாக்டர் ஏ ஜே டி ஜான்சிங் (A. J. T. Johnsingh) வன உயிரினப் பாதுகாப்பு விருது ரூ.25 லட்சம் பரிசுத்தொகையுடன் வழங்கப்படும்.