தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை காவல் ஆணையருக்கு எதிரான பாஜக மனு! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! - HIGH COURT

ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்த திமுகவினருக்கு விதிகளை மீறி அனுமதியளித்ததாக சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை கோரிய பாஜக மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்) (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2025, 3:16 PM IST

சென்னை :தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக போராட்டம் நடத்த திமுகவினருக்கு விதிகளை மீறி அனுமதியளித்ததாக சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி பாஜக தாக்கல் செய்த மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு மட்டுமல்ல நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக பாஜக அறிவித்தது. ஆனால், போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. ஆனால், ஆளுநருக்கு எதிராக திமுகவினர் போராட்டம் நடத்த உடனடியாக அனுமதித்ததாக குற்றம் சாட்டி பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ.மோகன்தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "கோயம்புத்தூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதுரையில் குஷ்பு , சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் போராட்டம் நடத்த காவல்துறையினரால் அனுமதி மறுத்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

ஜனவரி 6 ஆம் தேதியிலிருந்து 21 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு சென்னையில், எந்த ஆர்ப்பாட்டமும், போராட்டமும், ஊர்வலமும் நடத்தக் கூடாது என காவல்துறை உத்தரவிட்டிருந்த நிலையில் ஜனவரி 7 ம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினருக்கு எதிராக காவல்துறை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் செயல்படுவதன் மூலம் காவல்துறை ஒருதலைபட்சமாகவே செயல்பட்டுள்ளது. போராட்டங்களுக்கு ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என்ற சென்னை நகர போலீஸ் சட்ட விதியை மீறி செயல்பட்ட சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி உள்துறைச் செயலாளருக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு மீண்டும் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வேல்முருகன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வேல்முருகன், தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை 4 வாரங்களில் மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை தள்ளி வைத்தார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details