தூத்துக்குடி:2006ம் ஆண்டு திருச்செந்தூர் கோயிலுக்கு புதிதாக இரண்டு யானைக்குட்டிகள் வரவழைக்கப்பட்டிருந்தன. குமரன், தெய்வானை என பெயரிடப்பட்டிருந்த அந்த இரண்டும் முறையே 3 வயது மற்றும் 6 வயதுடையவை. "வயதில் சிறியதான குமரன் யானை சுட்டித்தனம் மிகுந்ததாக இருந்தது, முன்னும் பின்னும் நகர்ந்து கொண்டும் தனது காலை பிணைத்திருந்த சங்கிலியை இழுத்துக் கொண்டும் இருந்தது. தெய்வானை தன்னைக் கட்டியிருந்த இடத்திலிருந்து நகரவே இல்லை. ஆனால் அதனிடம் பார்ப்பதற்கு விசித்திரமான பழக்கம் இருந்தது. ஓரு ஆட்டுரலில் மாவாட்டுவது போன்று தனது துதிக்கையை சுற்றிக் கொண்டே இருந்தது" என்கிறார் அந்த வருடத்தில் திருச்செந்தூரில் வசித்தவரான ஈடிவி பாரத்தின் சங்கரநாராயணன்.
கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து அதே யானையின் காட்சி வேறு விதமாக நமக்கு கிடைத்திருக்கிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலின் ராஜகோபுரம் அருகே உள்ள யானைக்கொட்டகையில் இருந்து நேற்று (18.11.2024) பிற்பகலில் கிடைத்த காட்சி நெஞ்சை உலுக்குவாக அமைந்தது. இந்த வீடியோவில் முருகன் கோயில் யானையான தெய்வானை தனது கொட்டகையில் கட்டிப்போடப்பட்டிருக்கிறது. துதிக்கையை சுழற்றியபடி இருக்கும் அந்த யானையை போக்கு காட்டியவாறு இருவர், அதன் காலடியில் இருக்கும் உடல்களை மீட்க முயல்கின்றனர். பாகன்களில் ஒருவர் யானைக்கு சில உத்தரவுகளை வழங்கி அதனை மண்டியிடச் செய்கிறார். யானையிடம் அதன் மொழியில் பேசும் பாகன் அழுது கொண்டே யானையை தேற்றி சாந்தப்படுத்த, ஒருவழியாக உடல்கள் மீட்கப்பட்டன.
யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்தோரில் ஒருவர் அதன் பாகனான உதயகுமார் (46), மற்றொருவர் உதயகுமாரை பார்க்க வந்திருந்த அவரது உறவினர் சிசுபாலன். திருச்செந்தூர் முருகன் கோயிலைப் பொறுத்தவரையிலும் இந்து சமய அறநிலையத்துறையின் தகவல்களின் படி தெய்வானை என்ற 25 வயது யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் பாகன்களாக உதயகுமார் (47) , செந்தில்குமார் (46), ராதாகிருஷ்ணன் (57) ஆகியோர் உள்ளனர். இவர்களில் உதயகுமாரும் செந்தில்குமாரும் சகோதரர்கள் , ராதாகிருஷ்ணன் இவர்களின் தாய் மாமா ஆவார்.
என்ன நடந்தது என்பது தொடர்பாக பாகன்களின் உறவினர்களிடம் விசாரித்த போது, மரணமடைந்த சிசுபாலன் பாகன்களின் உறவினர் எனக் கூறினர். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவரின் தந்தையும் யானைப்பாகன் தான். சிசுபாலன் யானைப்பாகனாக வேண்டும் என ஆசைப்பட்டாலும், ராணுவத்திலிருந்து திரும்பும் போது வயது அதிகமானதால் யானைப்பாகனாக முடியவில்லை என கூறுகின்றனர் அவரது உறவினர்கள்.
யானை தாக்கிய சம்பவம் தொடர்பாக நேரில் பார்த்த பக்தர்களிடம் பேசியபோது, யானைக் கொட்டைகயினுள் இருந்த சிசுபாலனைத் தான் யானை முதலில் தாக்கியதாகக் கூறினர். இதனால் அவரை காப்பாற்ற முயன்ற உதயகுமாரையும் யானை தாக்கியுள்ளது. ஈடிவி பாரத்திடம் பேசிய திருச்செந்தூர் வனச்சரக அலுவலர் கவின், சிசுபாலன் யானையை தொட்டவாறு செல்ஃபி எடுத்துள்ளார். தன்னை புதிய நபர் தொடுவதை ஏற்றுக் கொள்ளாத தெய்வானை யானை சிசுபாலனை தாக்கியுள்ளது. உதயகுமாரை தாக்கிய பின்னர் தான் அவர் தனது பாகன் என்பதை உணர்ந்து கொண்டுள்ளது. இதனால் அவரை துதிக்கையால் தொட்டு எழுப்ப முயன்றதை அருகிலிருந்தவர்கள் பார்த்துள்ளனர் என்கிறார். உதயகுமார் மயங்கியநிலையில் இருந்ததால் மீண்டும் சிசுபாலனை தனது காலடியில் போட்டு தாக்கியதாகவும் கவின் குறிப்பிடுகிறார்.
பின்னர் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியிலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் மரணம் நிகழ்ந்ததால், கோயில் நடை சாத்தப்பட்டு, சுமார் 45 நிமிடத்திற்கு பிறகு திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமணன் பேசுகையில், திருச்செந்தூர் யானை தெய்வானை மிகவும் அமைதியான மிருகம். யானை மிகவும் உணர்ச்சிப்பூர்வமான மிருகம். யானையின் நெருக்கமானவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உணவு உட்கொள்ளாது. பாகன் மரணமடைந்த பின்னர் பல மணி நேரத்திற்கு தெய்வானை யானை உணவு உட்கொள்ளவில்லை என கூறினார்.
"தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலும் கோயில்களில் யானைகளின் பங்களிப்பு என்பது பாரம்பரியமாக இருந்து வருகிறது. சுவாமி ஊர்வலம் தொடங்கி, கோயிலின் முக்கிய நிகழ்வுகளில் யானைகளும் சேர்ந்தே பயணிக்கின்றன. ஆடி சுவாதி நட்சத்திரம் என்ற திருவிழாவுக்காக ஆண்டு தோறும் உடல் முழுவதும் விபூதி பூசி யானை காட்சியளிக்கும் நிகழ்வும் ஆண்டுதோறும் திருச்செந்தூரில் நிகழ்கிறது." என குறிப்பிடுகிறார் திருச்செந்தூரைச் சேர்ந்த கல்யாண சுந்தரம்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் புகழ்மிக்க யானைகளான புருஷோத்தமன், சாந்தி போன்ற யானைகள் வளர்க்கப்பட்டன. நீண்ட தந்தங்களுடன் ஆஜானுபாகுவான உயரம் கொண்ட புருஷோத்தமன் யானை திரைப்படங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
உடல்நலம் பாதிக்கப்பட்டு 2005ம் ஆண்டு சாந்தி யானை மரணமடைந்த நிலையில், கிட்டத்தட்ட ஓராண்டாக நிரந்தர யானை இன்றி திருச்செந்தூர் கோயில் இருந்தது. அப்போது கோயிலின் தக்கார் எனப்படும் நியமன நிர்வாகியாக இருந்த தேவதாச சுந்தரம் தமது சொந்த செலவில் இரண்டு யானைகளையும் வாங்கி முருகன் கோயிலுக்கு தானமாக வழங்கினார்.