மதுரை:விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உழவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, கடந்த சில நாட்களுக்கு முன்பு தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவரும், பொறியாளருமான திருநாவுக்கரசு வந்திருந்தார்.
மழைநீர் சேகரிப்பு, பாசனம், வெள்ளம் மற்றும் வறட்சி தடுப்பு குறித்து தனது பொறியாளர் நண்பர்களோடு ஆய்வு மேற்கொண்டு, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.
இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம் மற்றும் மழைநீரால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்து எளிய தீர்வாக அவர் முன் வைத்த ஆய்வின் அடிப்படையில் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி ஒன்றை வழங்கினார்.
அபாயகரமான நிலைமை:அப்போது பேசிய அவர், “தற்போது தமிழ்நாட்டில் ஓராண்டுக்கு 472 டிஎம்சி தண்ணீர் நிலத்தடியிலிருந்து எடுக்கப்படுகிறது. இது ஒரு மிக அபாயகரமான நிலைமையாகும். நிலத்தடி நீர் உறிஞ்சப்படுமானால், அது மிக மோசமான சூழல் விளைவுகளை மட்டுமன்றி, பூமியையும் பாதிக்கும்.
இதனைச் சமாளிக்க ஒரு அடி விட்டமுள்ள குழாய்களை ஆழ்துளைக் கிணறு அமைப்பது போன்று, நிலத்தடி நீர் மட்ட அளவிற்கு பூமிக்குள் உட்செலுத்தி, தண்ணீர் உட்புகும் இடத்தில் வடிகட்டி அமைத்துவிட்டால் போதும். தோராயமாக 240 குழாய்களில் ஒரே நாளில் மட்டும் 1 டிஎம்சி தண்ணீர் பூமிக்குள் செல்லும்.
இதுபோன்ற அமைப்பினை காவிரி, கொள்ளிடம் மட்டுமன்றி, கண்மாய், ஏரிகள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்தினால் 2 மாத மழைக் காலங்களில் அதிக டிஎம்சி தண்ணீரை உட்செலுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தை நிச்சயமாக உயர்த்த முடியும்.
மின்சார செலவு மிச்சம்: நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது என்பது மிக அவசியமான ஒன்று. ஏனெனில், 500 அடியில் உள்ள தண்ணீரை ஆழ்துளை போர்வெல் மூலமாகக் கொண்டு வர அதிக மின்சாரம் செலவாகிறது. இந்நிலையை மாற்ற நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, 100 அடிக்குள் தண்ணீரின் மட்டத்தை உயர்த்தினால், மின்சாரத்தின் பயன்பாடு 20 சதவிகிதம் மட்டுமே செலவாகும். நிலத்தடி நீர்மட்டம் கீழே செல்லச் செல்ல மின்சாரத்தின் தேவையும் அதிகரிக்கும். மேலும் சுற்றுச்சூழலும் மோசமடையும்.
வறட்சிப் பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம்:குடிநீர்த் தேவைக்காக அதிக தூரமுள்ள இடங்களுக்கு, குறிப்பாக கல்லணையிலிருந்து - ராமநாதபுரம் வரை பம்ப் செய்து விநியோகிக்கப்படுகிறது. கிடைமட்டமாக பம்ப் செய்யும்போது அதிக மின்சாரம் தேவைப்படாது.
பெரிய அளவில் வெள்ளம் வரும்போது, குறிப்பாக மழைக்காலங்களில், காவிரி நீரைத் திறந்து விடுகின்ற காலங்களில் தண்ணீரை, நாங்கள் கூறியவாறு பம்ப் செய்து விநியோகம் செய்ய அரசு திட்டமிட வேண்டும். காவிரி ஆற்றிலிருந்து தெற்கு நோக்கிச் சென்றால் கடல் மட்ட அளவு 40-50 அடி தான் வித்தியாசம் உள்ளன.