நாமக்கல்:சேலம், நாமக்கல் மாவட்டங்களின் எல்லையை ஒட்டிய வெப்படை பகுதியில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் அடுத்தடுத்த திருப்பங்களும் கேட்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் உள்ளன.
கேரள மாநிலம் திருச்சூரில் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்ட ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளைக் கும்பல் தமிழ்நாடு எல்லைக்குள் வந்து விட்டதாக நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு கேரளாவின் திருச்சூர் போலீசார் தகவல் அளித்துள்ளனர். இது தொடர்பாக ஈடிவிபாரத்திடம் பேசிய திருச்சூர் மாநகர கமிஷனர் இளங்கோ, திருச்சூரில் இரண்டு இடங்களிலும் புறநகரிலும் மொத்தம் மூன்று ஏடிஎம்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், அனைத்தும் சம்பவங்களிலும் தடயங்கள் ஒரே போன்று இருந்ததாக கூறியுள்ளார்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் இந்த ஏடிஎம்களில் 60 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எந்திரத்தில் பணம் நிரப்பப்பட்ட மறுநாளே வங்கி ஏ டி எம் மையங்களில் கொள்ளை நடந்துள்ளதாக கமிஷனர் இளங்கோ கூறியுள்ளார். காவலாளிகள் இல்லாத ஏடிஎம் மையங்களை தேர்வு செய்து பணம் வைக்கும் இடத்தை மட்டும் கேஸ்கட்டர் எந்திரம் மூலம் வெட்டி எடுத்துச் சென்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
போலீசார் சேசிங் செய்து பிடித்த காட்சிகள் (Credit - ETV Bharat Tamil Nadu) வழக்கமாக காரில் சென்று கொள்ளையை அரங்கேற்றம் செய்த பின்னர், காருடன் கண்டெய்னர் லாரியில் ஏற்றிவிட்டு தப்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அனைத்து விவரங்களும் கேரள போலீசார் சார்பில் தமிழ்நாடு போலீசாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் SK LOGISTICS என்பதை LOGITICS என ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன் எழுதியிருந்த லாரி குறித்த அடையாளங்களும் தெரியப்படுத்தப்பட்டன.
இதனையடுத்து தமிழ்நாடு எல்லைக்குள் புகுந்த லாரியை நாமக்கல் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். பைக்குகள், கார்கள் என 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று இந்த கண்டெய்னரை வழிமறிக்க முயன்றதாக நாமக்கல் போலீசார் கூறுகின்றனர். அதிவேகத்தில் சென்ற டிரக் சாலையில் சென்ற சிலரை இடித்து தப்பியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீசார் இந்த வாகனத்தை சுற்றி வளைத்து சேலம், நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள அரிசி குடோன் அருகில் பிடித்துள்ளனர். அப்போது லாரியில் இருந்த கொள்ளையர்கள் சிலர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் வாகனங்களில் சென்று அந்த கண்டெய்னர் லாரியை விரட்டிச் சென்று சேலம் மாவட்ட எல்லையில் சுற்றி வளைத்தனர்.
பின்னர் அந்த கண்டெய்னர் லாரியை சோதனை செய்ததில், அதில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் துப்பாக்கியுடன் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி, உதவி காவல் ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பாதுகாப்புக்காக போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் லாரியில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஐந்து பேர் பிடிபட்டுள்ளனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 5 பேரையும் போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். என்கவுண்டர் தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில் குமார் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்க முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், விரைவில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி என்கவுண்டர் குறித்து விளக்கம் அளிக்கப்படும் என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே கிளிக் செய்யவும்