தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 5:39 PM IST

ETV Bharat / state

"வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்"- இபிஎஸ் குற்றச்சாட்டு!

TN Agri Budget 2024: திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகியும் குருவைச் சாகுபடி விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை, இனி வரும் காலத்தில் அவர்களைச் சேர்க்க வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
Edappadi K Palaniswami

இபிஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று (பிப்.20) தாக்கல் செய்தார். இதற்குப் பல்வேறு தரப்பைச் சார்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வேளான் பட்ஜெட் குறித்துக் கூறியதாவது, "திமுக ஆட்சிக்கு வந்தால் 2500 ரூபாய் ஒரு குவின்டால் நெல்லுக்கு வழங்கப்படும், ஒரு மெட்ரிக் டன் கரும்புக்கு ஆதார விலை 4000 வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த விவசாயிகளை மறந்து விடுகிறார்கள்.

2023ஆம் ஆண்டில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டு 3.50 லட்சம் ஏக்கர் நிலம் தண்ணீர் இல்லாமல் சேதம் அடைந்து உள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீடு திட்டம் மூலம் இழப்பீடு தொகை இன்னும் கிடைக்கவில்லை. இதனை, அரசு கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினோம், ஆனால், இன்னும் அது நிறைவேற்றப்படவில்லை.

திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகியும் குருவைச் சாகுபடி விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. இனி வரும் காலத்தில் அவர்களைச் சேர்க்க வேண்டும், அவர்களுக்குப் பயிர்க் காப்பீடு திட்டத்தில் நிவாரணம் வழங்க வேண்டும்.

சம்பா தாளடி விவசாயிகள் கர்நாடகத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் கிடைக்க வேண்டிய தண்ணீரைப் பெறாததால் பயிர் விளைச்சல் பாதிக்கிறது. உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விட வேண்டும். காலம் தாழ்த்தி தண்ணீர் திறந்து விட்டதால் விவசாயிகளுக்குப் பயன் அளிக்கவில்லை.

சம்பா, தாளடி பயிரிட்டு வீணான ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். பயிர்க் காப்பீடு திட்டம் மூலம் இழப்பீடு கிடைத்திருந்தால் 84,000 கிடைத்து இருக்கும். அதிமுக ஆட்சியில் கரும்பு விவசாயிகள் கரும்பு முழுவதும் கொள்முதல் செய்யப்பட்டது" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஓசூரில் சர்வதேச ஏலம் செய்யும் மையம் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. அது இன்னும் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை. இயற்கை விவசாயத்திற்கு இன்றைய வேளாண் பட்ஜெட்டில் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.

தென்னை விவசாயிகளுக்கும் எந்தவித முன்னறிவிப்பும் இல்லை. திமுக தேர்தல் அறிக்கையில் இளநீர், தேங்காய் பயன்பாடுகள் செய்ய ஊக்கத்தொகை, நோய்களால் பாதிக்கப்படும் தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், பட்டுக்கோட்டையில் ஒருங்கிணைந்த தென்னை உற்பத்தி வளாகம் ஏற்படுத்தித் தரப்படும் என்று சொன்னார்கள், இவற்றில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை.

ஆன்லைன் முறை கொண்டு வந்ததன் காரணமாகப் படிக்காத விவசாயிகள் பலர் கஷ்டப்படுகிறார்கள். காவிரி குண்டாறு இணைக்கும் திட்டம் அதிமுக அரசு அடிக்கல் நாட்டியது அது கிடப்பில் கிடக்கிறது. இயற்கை விவசாயத்திற்கு எந்த அறிவிப்பும் இல்லை.

தென்னை பயிரிடும் விவசாயிகளுக்குக் கொடுத்த அறிவிப்பை நிறைவேற்றவில்லை. காவேரி குண்டாறு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றார். மேலும், மேகதாது அணை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. கோதாவரி காவேரி திட்டம் நிறைவேற்றப்பட்டால் தண்ணீர் பிரச்சனை இருக்காது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அண்டை மாநிலங்களுக்குச் சென்று அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், திமுக பெற்ற பின்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளது. சிறு குறு விவசாயிகளுக்கு எந்தத் திட்டமும் இல்லை. விவசாயிகளுக்குக் கடன் கொடுப்பதால் அவர்களின் கடன் தான் அதிகரிக்கும் அவர்கள் திரும்பிச் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சினேகம் அறக்கட்டளை வழக்கு: பாஜக பிரமுகர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை..

ABOUT THE AUTHOR

...view details