தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 6, 2024, 8:19 PM IST

Updated : Jun 6, 2024, 9:19 PM IST

ETV Bharat / state

அதிமுக - பாஜக கூட்டணி பிரிவுக்கு அண்ணாமலை தான் காரணம்.. எஸ்.பி.வேலுமணி கடும் தாக்கு! - SP Velumani

S.P VELUMANI PRESS MEET: நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுகவின் வாக்கு வங்கி இழப்புகள் பற்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியவற்றை காணலாம்.

S.P.Velumani
எஸ்.பி.வேலுமணி (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்பத்தூர்:கோவை ஒசூர் சாலையில் அமைந்துள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை தொகுதி வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையில் அதிமுகாவின் தோல்விக்கான காரணம் குறித்தும், வரக்கூடிய தேர்தல்களில் எப்படி மக்களை புரிந்துகொண்டு வாக்கு வங்கியை அதிகரிப்பது போன்றவை ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்.பி.வேலுமணி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர் தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். தேர்தல் தோல்வி குறித்து அவர் கூறுகையில், 1980, 1989, 1996, 2004 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் பல்வேறு தோல்விகளை அதிமுக பெற்று இருந்தாலும், அதன் பின்னர் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதாக எடப்பாடி கூறுவதை வழிமொழிவதாக கூறினார்.

கோவை தொகுதியும், அதிமுகவும்:மேலும், கோவை மாவட்ட மக்கள் இந்த தேர்தலில் ஒரு தீர்ப்பை கொடுத்து இருக்கின்றனர். கோவைக்கு அதிமுக போல திட்டங்களை தந்த கட்சி வேறு இல்லை. அதிமுக பல தேர்தல்களைச் சந்தித்த கட்சி. எனவே, எதையும் எடுத்தேன், கவிழ்த்தேன் என பேச முடியாது. 2019-ல் 19.39 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், இப்போது 20.46 சதவீதம் வாங்கி இருக்கிறோம். கடந்த தேர்தலை விட கூடுதலாக வாக்குகளை வாங்கியுள்ளோம். திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்து இருக்கின்றது.

கூட்டணி கலைய அண்ணாமலைதான் காரணம்:அண்ணாமலை குறித்து பேசக்கூடாது என இருந்தோம். அண்ணாமலை அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்களை அதிகமாக ஏசியுள்ளார். அதுமட்டுமின்றி அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடியாரை பற்றியும் அதிகமாக பேசினார். எனவே, கூட்டணி கலைய அண்ணாமலைதான் காரணம். ஒருவேளை கூட்டணி இருந்திருந்தால் 30, 35 சீட் கிடைத்திருக்கும். எந்த முடிவு எடுத்தாலும் அதிமுக தெளிவாக இருக்கும். ஆனால், கூட்டணியில் இருந்து வெளியே வந்த பின்னும் பாஜகவின் பி பிரிவாக அதிமுக இருப்பதாக பொய் பிரச்சாரம் செய்து சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கியை திமுக பெற்றுள்ளது என்றார்.

அண்ணாமலை விமர்சிப்பதை விடவேண்டும்: 2014ஆம் ஆண்டு பாஜக தற்போது பெற்ற வாக்கை விட, சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதலான வாக்குகளை வாங்கினார். அவரை விட குறைவான ஓட்டுதான் அண்ணாலை வாங்கி இருக்கிறார். எனவே அண்ணாமலை அதிமுகாவை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் ஆட்சி அமையும்.

எனவே, இவ்வாறான வீண் பேச்சை நிறுத்திவிட்டு, அண்ணாமலை, ஆனைமலையாறு நல்லாறு திட்டம், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும். மேலும் நீட் தேர்வு, மேகதாது அணை பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். அதை செய்யாமல் அண்ணாமலை அடுத்த தேர்தலில் வேறு தொகுதியில் போய் நிற்கக் கூடியவர் என்றும், பாஜகவை அதிமுக அதிக வாக்குகளையே பெற்றுள்ளது. அடுத்த தேர்தலில் அதிமுக மீண்டும் ஆளுங்கட்சியாக வெற்றி பெறும். எனவே, இந்த தோல்வியைக் கண்டு அதிமுக தொண்டர்கள் சோர்வடையப் போவதில்லை. இந்த தோல்வி, வெற்றிக்கான படிக்கட்டாக அமையப் போகிறது” என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.

இதையும் படிங்க:"விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை" - பிரேமலதா விஜயகாந்த் அடுக்கும் காரணங்கள்!

Last Updated : Jun 6, 2024, 9:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details