சிவகங்கை: கீழப்பிடாவூரில் கல்வெட்டு ஒன்று இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த கண்ணன் மற்றும் லிங்கம் ஆகியோர் சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர், புலவர் கா.காளிராசா, செயலர் இரா. நரசிம்மன், கள ஆய்வாளர் கா.சரவணன் ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் மற்றும் புலவர் கா. காளிராசா கூட்டாக செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது:
மதுரையும் சமணப்படுக்கைகளும்..!:"மதுரையைச் சுற்றி சமணர் பெரும் பகுதியில் வாழ்ந்துள்ளனர் என்பதை மதுரையைச் சுற்றியுள்ள மலைகளில் சமணப்படுக்கைகள் அமைந்துள்ளதன் வழி அறிய முடிகிறது. மேலும் இங்கு உள்ள ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டு மகாவீரர் திருமேனிகள் அதை செய்வித்த அச்சணந்தி அடிகள் போன்ற விவரங்கள் வட்டெழுத்துக் கல்வெட்டாகவும் கிடைக்கின்றன. மேலும் அக்காலக் கட்டங்களில் செய்த திருமேனிகள் அவர்களுக்கு அளித்த நிலக்கொடைகள் போன்ற செய்திகளும் கழுகுமலை போன்ற இடங்களில் கல்வெட்டாக விரிவாக கிடைக்கின்றன.
ஏழு, எட்டாம் நூற்றாண்டில் சைவர்களுக்கும் சமணர்களுக்கும் நிகழ்ந்த பூசல்களில் சமணர்கள் கழுவேற்றப் பெற்றதாகவும் மலை போன்ற மறைவிடங்களில் மறைந்து வாழ்ந்ததாகவும் சொல்லப்பட்டு வருகிறது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களில் பத்தாவது பாடல் சமணர்களைப் பற்றிய செய்தியை உள்ளடக்கியதாக உள்ளது. பாண்டிய நாட்டில் பத்தாம் நூற்றாண்டோடு சமணம் வழக்கொழிந்ததாக கருதப்பட்டு வரும் நிலையில், மானாமதுரை அருகே உள்ள கீழப்பிடாவூரில் கி.பி.13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப்பள்ளி தொடர்பான கல்வெட்டொன்று கிடைத்துள்ளது.
உறுதியாகும் சமணப்பள்ளிகளுக்கு மன்னர்களின் கொடை: கல்வெட்டில் ஒரு பக்கம் அரசு அலுவலர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது ஒப்பமாக எழுத்து என்று வருகிறது. இவ்வகையில் மக்களின் பயன்பாட்டில் சமணப்பள்ளி இருந்ததோடு, அரசர்கள் அதற்கு நிலக்கொடை வழங்கும் அளவிற்கு முதன்மை பெற்றிருந்தது என்பதும் சிறப்பானதாகும்.
கல்வெட்டின் அமைப்பு: நான்கு பக்கங்களிலும் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் திரிசூலம் செதுக்கப்பட்டு அதன் கீழிருந்து கல்வெட்டு தொடங்குகிறது. இப்பக்கத்தில் ஏழு வரிகள் இடம்பெற்றுள்ளன. மற்ற மூன்று பக்கங்களிலும் எழுத்துகள் உள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்றன்பின் ஒன்றாக செய்தி எழுதப்பட்டுள்ளது. முறையே 22, 25, 28 வரிகள் இடம்பெற்றுள்ளன. கல்வெட்டு தரைக்கு மேலிருந்து இரண்டே முக்கால் அடி உயரம் அமைந்துள்ளது. தரைக்கு கீழேயும் ஒரு அடி ஒன்றரை அடி ஆழம் இருக்கலாம். அதிலும் எழுத்துகள் கீழ் செல்கின்றன.
விக்கிரம பாண்டியன் புகழோங்கும் கல்வெட்டுக்கள்: கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இது 13ஆம் நூற்றாண்டாகக் இருக்கலாம் என கருதப்படுகிறது. இக்கல்வெட்டில் விக்கிரம ராம வளநாடு என்று வளநாட்டில் புதிய பெயரும் இடம்பெற்றுள்ளது. நாற்பத்தெண்ணாயிரப் பெரும்பள்ளி மற்றும் பள்ளிச் சந்தம் போன்ற சொற்களைக்கொண்டு இக்கல்வெட்டு விக்கிரம பாண்டியனை குறிப்பதாகக் கொள்ளலாம். மேலும் மாறவர்மன் விக்கிரம பாண்டியன், முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் தம்பியாவார். இவரது காலம் பொ.ஆ 1268 முதல் 1281 வரையாகும். இவர் நடு நாட்டில் திருநறுங் கொண்டையில் நாற்பத்தெண்ணாயிரப் பெரும்பள்ளி என்ற பெயரில் சமணப்பள்ளி ஒன்றை நிறுவியதோடு அனைத்துக் கடவுளருக்கும் இறையிலி நிலங்கள் வழங்கியதை இவரது கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
நாற்பத் தெண்ணாயிரப் பெரும்பள்ளி:"ஸ்வஸ்திஸ்ரீ" எனத் தொடங்கும் இக்கல்வெட்டில் கருங்குடி நாட்டு பெரும் பிடாவூர் நாற்பத்தெண்ணாயிரப் பெரும்பள்ளி தேவர் என வருகிறது. இதைக் கொண்டு இவ்வூரில் சமணப்பள்ளி இருந்ததை நாம் அறிய முடிகிறது.