விழுப்புரம்: மரக்காணம், புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற மஞ்சனிஸ்வரர் ஐயனார் கோயில் அருகே, ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான வானவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று காலை வழக்கம் போல் வெடி பொருட்களை உலர வைக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது மதியம் 1 மணியளவில், அதிக வெயில் காரணமாக உலர வைக்கப்பட்ட பட்டாசுகளில் தீ பற்றி வெடித்து சிதறியது. இதனைக் கண்ட பணியாளர்கள் அலறியடித்து ஓடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து, தீ விபத்தில் சிக்கிய பட்டாசு ஆலை உரிமையாளர் ராஜேந்திரனை மீட்டு, சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும், பட்டாசு ஆலையில் வேலை செய்த ஆண்டாள் (35), கவுரி (35) ஆகிய இரு பெண்களும் இத்தீ விபத்தில் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு, மூன்று பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்த்தியை ஏற்படுத்தி உள்ளது.