தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

ETV Bharat / state

"அடுத்த அமாவாசைக்குள் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிபோகும்"- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆருடம்! - os manian

அடுத்த அமாவாசைக்குள் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிபோய்விடும் என மயிலாடுதுறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியுள்ளார்.

செந்தில் பாலாஜி மற்றும் ஓ.எஸ்.மணியன்
செந்தில் பாலாஜி மற்றும் ஓ.எஸ்.மணியன் (Credits - ETV Bharat Tamil Nadu)

மயிலாடுதுறை:செம்பனார்கோவில் அதிமுக தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியம் சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருக்கடையூரில் ஒன்றிய செயலாளர் ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.பவுன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதில் சிறப்புரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஓ‌.எஸ்.மணியன் பேசுகையில், "அதிமுக 32 ஆண்டு காலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து பல்வேறு சாதனைகள் படைத்துள்ளது. தவறான கருத்துக்களை அதிமுக பேசியது கிடையாது. முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தியவர் எடப்பாடியார். காவிரி, முல்லைப் பெரியாறு, தெலுங்கு கங்கை தண்ணீர் திட்டம் உள்ளிட்ட ஜீவாதார பிரச்சனைகளை கையில் எடுத்து வெற்றி கண்டவர்கள் அதிமுகவின் முன்னாள் முதல்வர்கள்.

ஆனால் திமுகவினர் ஆட்சியில் அமர்ந்து சுகமாக சம்பாதித்து 144 வாரிசுகளோடு வாழ்ந்து கொண்டிருப்பதுதான் திமுகவின் சாதனை என்றார். பின்னர் திமுக எம்பி ஜெகத்ரட்சகனின்‌ கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் தொழிற்சாலைகள், சொத்துமதிப்பு ஆகியவற்றைப் பட்டியலிட்டுக் காண்பித்தார்.

ஓஎஸ் மணியன் பேச்சு (Credits - ETV Bharat Tamil Nadu)

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவின் நிதி உதவியில் வாழ்ந்து வரும் இலங்கை, நம் நாட்டுப் படகுகளை தேசிய உடைமையாக்கி படகுகளை திருப்பி தரமுடியாது என்று கூறுகிறது. ராமநாதபுரம் மீனவர்களுக்கு ரூ.10 கோடி அபராதம் விதித்துள்ளது. அதையும் தாண்டி நெஞ்சை நொறுக்கும் சம்பவமாக தமிழக மீனவர் ஐந்து பேருக்கு மொட்டை அடித்து இலங்கை ராணுவம் கொடுமைப்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:"பருவமழை தொடங்கும் நேரத்தில் வடிகால் பணி".. தமிழக அரசை கடுமையாக சாடிய அதிமுக முன்னாள் அமைச்சர்!

மத்திய மாநில அரசு பதில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுவரை இலங்கையை கண்டிக்கவில்லை. தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெற்றுவிட்டோம் என்று மார்தட்டும் திமுக, மீனவர் பிரச்சனையில் ஒன்றும் செய்யாதது வெட்கக்கேடானது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஸ்டாலின் அமெரிக்கா சென்று வந்து தனது மகன் உதயநிதியை துணை முதல்வர் ஆக்கி இருக்கிறார்.

சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்து அமைச்சராகியுள்ள செந்தில் பாலாஜி 30 நாட்களுக்கு மேல் பதவியில் நீடிக்க முடியாது. அதிகாரமிக்க அதே பதவியில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகியுள்ளதால் சாட்சிகளைக் கலைத்துவிடுவார் என்று பாதிக்கப்பட்டவர் உச்சநீதிமன்றத்தில் அவர் ஜாமினில் வெளிவந்த 72 மணி நேரத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது விசாரணைக்கு வந்துள்ளது.

அமாவாசைக்குள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி பறிபோய்விடும். நாட்டில் வழக்கை சந்தித்த தலைவர்கள் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வந்தபிறகு அமைச்சராவது இயற்கை. ஆனால் பெயிலில் வந்த விசாரணை கைதி செந்தில் பாலாஜியை முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் அமைச்சராக்கியுள்ளார்.

செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டதே முதலமைச்சர் ஸ்டாலின்தான். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி லஞ்சம் வாங்கினேன் திருப்பி கொடுத்துவிட்டேன் என்று லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டதால் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கைது செய்யப்பட்டு வெளிவந்துள்ள செந்தில் பாலாஜி தப்பிக்க வாய்ப்பில்லை என" தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details