சென்னை: கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான வி.கே.சசிகலா, பிளவுபட்ட அதிமுகவை ஒன்றிணைக்க தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தார். இதற்காக பல முக்கிய நபர்களை சந்தித்தார்.
அதனைத் தொடர்ந்து, 2021 சட்டப்பேரவையில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக, திடீரென அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை.
இதனை அடுத்து, அதிமுகவில் இருக்கக்கூடிய அனைத்து தொண்டர்களையும் ஒருங்கிணைப்பதே தனது தலையாய கடமை என கூறி வந்தார். இந்நிலையில், நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக, 7 இடங்களில் டெபாசிட் இழந்து, 40 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.
இத்தகைய சூழலில், "அதிமுகவை ஒன்றிணைக்கவும், 2026-ல் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரவும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்க இருப்பதாக" சசிகலா தெரிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக 'அம்மாவின் வழியில் மக்கள் பயணம்' என்ற தலைப்பில் இன்று (ஜூலை 17) முதல் தென்காசி மாவட்டத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். மேலும், 2-வது நாளாக நாளை (ஜூலை 18) கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியிலும், 19ஆம் தேதி சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் தொகுதிகளிலும், 20ஆம் தேதி வாசுதேவநல்லூர் தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சசிகலாவின் சுற்றுப்பயணம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அதில் அவர், "தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் அதிமுக ஒன்றுபட வேண்டும். அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் பிரிந்து சென்றவர்கள் ஒன்றுகூட வேண்டும்.