தமிழ்நாடு

tamil nadu

"உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளித்தால் காங்கிரஸ் வரவேற்கும்" - செல்வப்பெருந்தகை! - Selvaperunthagai ABOUT DPCM POST

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 22, 2024, 4:23 PM IST

Updated : Jul 22, 2024, 5:01 PM IST

Selvaperunthagai: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளித்தால் காங்கிரஸ் அதனை வரவேற்கும் எனவும், தலித் மக்கள் ஒரே குடையின்கீழ் இணைவது என்பது நல்ல முயற்சிதான் என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை முன்னிலையில் காங்கிரசில் இணைந்தவர்கள்
செல்வப்பெருந்தகை முன்னிலையில் காங்கிரசில் இணைந்தவர்கள் (Credits - selvaperunthagai X Page)

சென்னை: சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மற்றும் அதிமுக நிர்வாகிகள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதன்படி 20 நபர்கள் இன்று காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்.

செல்வப்பெருந்தகை பேட்டி (Credits - Selvaperunthagai X Page)

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை,"காங்கிரஸின் கட்டமைப்பை வலுப்படுத்த தொண்டர்களுடன் தொண்டர்களாக பணியாற்றி வருகிறோம். 90 விழுக்காடு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி உள்ளோம்.

நீட் தேர்வு: நீட் தேர்வு முறைகேட்டில் பல இடங்களில் வினாத்தாள் தேர்வுக்கு முன்பாக வெளிவந்துள்ளது. அது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வில் காங்கிரஸ் செய்த குளறுபடிகளை சரிசெய்வதாக கூறி வருகிறார். உண்மைக்கு புறம்பான செய்திகளை அவர் கூறி வருகிறார்.

காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வு வரவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில்தான் நீட் தேர்வு வருகிறது. பாஜக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் தொடர்ந்து நீட் தேர்வை காங்கிரஸ்தான் கொண்டு வந்தது என பொய் பரப்பும் வேலையை செய்து வருகிறது. இதுகுறித்து விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

தலித் விவகாரம்: தலித்துகள் ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைய வேண்டும் உள்ளிட்ட பா.ரஞ்சித் பேசியது அவரின் சொந்த கருத்து. அவரின் எண்ணங்களை காலம்தான் தீர்மானிக்கும். அமைச்சர் சேகர்பாபு, பா.ரஞ்சித்தின் திரைப்படங்களை பார்த்ததில்லை என்பதால் பா.ரஞ்சித்தை தெரியவில்லை எனக் கூறி இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை உள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அரசை ஆர்.எஸ்.எஸ்.தான் நிர்வகித்து வழிநடத்துகிறது. மத்திய அரசை ஆட்சி நடத்துவது ஆர்.எஸ்.எஸ்.தான். பிரதமர் மோடி அதன் முகமாகவே உள்ளார். அம்பேத்கர், எம்.சி.ராஜா, மீனம்பாள் சிவராஜ், ரெட்டைமலை சீனிவாசன், அயோத்தி தாசர் ஆகியோரை படித்தவகையில் 100% தலித் ஒற்றுமை இதுவரை வந்ததில்லை.

அம்பேத்கர் காலத்திலேயே தலித் தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. அம்பேத்கர் மட்டுமே ஒரே தலைவராக இருந்தது. தலித் மக்கள் ஒரே குடையின் கீழ் இணைவது என்பது நல்ல முயற்சிதான். தலித் ஒன்றிணைப்புக்கு அம்பேத்கர் போன்று தனித்துவமாக இருக்க வேண்டும்.

அம்பேத்கர் கடைசிவரை காங்கிரஸ் கட்சி உடன் மட்டுமே பயணித்தார். காங்கிரஸ் உடன்தான் அவரது பயணம் இருந்தது. பெரிய சமூகம் எனக்கூறியவர்கள் அம்பேத்கரின் கீழ் பணியாற்றினார்கள். இந்த சமூக கட்டமைப்பை காங்கிரஸ் கட்சியால்தான் செயல்படுத்த முடியும். இதனை ஆர்.எஸ்.எஸ், பாஜகவால் செய்ய முடியாது.

நீதிக்கட்சி ஆட்சியில் இருந்த போது தலித் தலைவர்கள் அமைச்சராக இல்லை. காங்கிரஸ் ஆட்சியில்தான் வி.ஏ.முனுசாமி என்கிற தலித் பிரதிநிதி அமைச்சராக்கப்பட்டார். இதனையும் நீலம் பண்பாட்டு மையம் பேச வேண்டும். பொதுவாக அனைத்துக் கட்சிகளையும் குற்றம் சாட்டுவதைப் போல் குற்றம் சாட்டக்கூடாது. காங்கிரஸ் கட்சிக்கு என்று தனித்துவம் உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களை அரவணைத்து செல்வது காங்கிரஸ் கட்சிதான்.

அரசியலமைப்புபடி எஸ்.டி, எஸ்.சி பிரிவினருக்கென்று சட்ட உரிமை உள்ளது. விகிதாச்சார உரிமைகளின் படி இடஒதுக்கீடு உள்ளது. அவருக்கான துறைகள் ஒதுக்கீடு குறித்து எந்த விதிமுறைகளும் இல்லை. காங்கிரஸ் கட்சிதான் முக்கிய துறைகளை தலித் தலைவர்களுக்கு அளித்துள்ளது.

திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சிகள் முக்கிய துறைகளை தலித் பிரதிநிதிகளுக்கு அளித்துள்ளது? அதிகாரம் உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் என்ன செய்துள்ளது என்பதை பா.ரஞ்சித் உள்ளிட்டவர்கள் பேச வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி அளித்தால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வரவேற்கும்.

துணை முதலமைச்சர்: உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கக்கூடாது என தீர்மானிக்க ஹெச்.ராஜா யார்? திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் அதனை தீர்மானிக்க வேண்டும். ஹெச்.ராஜா இதனை கூறுவதற்கு யார், அவருக்கு என்ன அதிகாரம் உள்ளது? அரசியலமைப்புப்படி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு பதவிக்கு ஒருவரை தேர்ந்தெடுத்தால், முதலமைச்சரின் முடிவுப்படி ஆளுநர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

பாஜகவிற்கு மத அரசியல் செய்வதுதான் நோக்கம். மக்கள் குறித்து பாஜக பேசுவது இல்லை. தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் பார்ப்பதுதான் ஹெச்.ராஜாவின் வேலை. ஆம்ஸ்ட்ராங்கிற்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் முன்வைக்கிறது" என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:சட்டக்கல்லூரி மாணவர்களிடம் நன்கொடை வசூலிப்பது ஏன்? பார் கவுன்சில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு! - MHC ordered to TN Bar Council

Last Updated : Jul 22, 2024, 5:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details