கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே மைலோடு பகுதியில் ஆர்.சி.கிறிஸ்தவ தேவாலயம் அமைந்து உள்ளது இந்த தேவாலய வளாகத்தில் அமைந்துள்ள பங்குத்தந்தை அலுவலகத்தில் கடந்த 20-ஆம் தேதி நாம் தமிழர் கட்சி நிர்வாகியும் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியருமான சேவியர் குமார் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இக்கொலை வழக்கில் இரணியல் காவல் நிலையத்தில், திமுக தக்கலை ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு, மைலோடு கிறிஸ்தவ தேவாலய பங்குத் தந்தை ராபின்சன் உட்பட 15 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பாதிரியார் ராபின்சன் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதனிடையே நேற்று முன்தினம் (ஜன.24) கல்குளம் தாசில்தார் தலைமையில் போலீசார், சேவியர் குமார் உடலை நீதிமன்ற ஆணைபடி மைலோடு கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.
இந்த நிலையில் இக்கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான திமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு உட்படக் கொலையாளிகளைக் கைது செய்வதில் காவல்துறை தாமதம் காட்டுவதாகக் குற்றம்சாட்டி இன்று (ஜன.26) நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில் "கொலை நடந்து இத்தனை நாட்களாகியும் அரசு மெத்தனமாக உள்ளது. தேவாலயத்தில் அழைத்து பேச்சுவார்த்தை என கூறி அடித்து கொலை செய்யப்பட்டு தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளது.