சேலம்:தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் சேலத்தில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக சேலம் சிவதாபுரம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பியது. அதிலிருந்து வெள்ளமாக வெளியேறிய நீர் ஏரியின் அருகே உள்ள சுமார் ஆயிரம் வீடுகளுக்குள் புகுந்தது. மேலும் சேலம் - இளம்பிள்ளை செல்லும் சாலையில் ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியது .
30 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதில் அவ்வழியாக சென்ற சரக்கு ஆட்டோ ஒன்று நீரில் சிக்கி மூழ்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக ஒட்டுநர் உயிர் தப்பினார். இந்த சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி நின்றதால் சேலத்தில் இருந்து இளம்பிள்ளை, தாரமங்கலம், வேம்படிதாளம், சித்தர் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஏரியிலிருந்து சாலையில் வழிந்து ஓடும் தண்ணீர் காரணமாக இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களும் தண்ணீரில் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்லூரி செல்ல முடியாமல் வீடு திரும்பினர்.