தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சங்கிகள் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர்! ஓய்வுபெற்ற நீதிபதிகள் பரபரப்புக் குற்றச்சாட்டு! - RETIRED JUDGES ON APPOINTMENT

நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதி பின்பற்றப்படுவதில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் சந்துரு மற்றும் ஹரி பரந்தாமன் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஓய்வு பெற்ற நீதிபதிகள் சந்துரு, ஹரி பரந்தாமன்
ஓய்வு பெற்ற நீதிபதிகள் சந்துரு, ஹரி பரந்தாமன் (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2025, 3:49 PM IST

சென்னை:நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதியைப் பின்பற்றி பன்முகத்தன்மையை கடைபிடிக்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் சந்துரு மற்றும் ஹரி பரந்தாமன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் சந்துரு மற்றும் ஹரி பரந்தாமன் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

ஓய்வு பெற்ற நீதிபதிகள் சந்துரு, ஹரி பரந்தாமன் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

உயர் நீதிமன்றங்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்து அரசியல் அமைப்பில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ஒரு சில குழுக்களில் இருந்து மட்டும் நீதிபதிகள் பிரதிநிதித்துவம் வராமல் பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் வர வேண்டும்.

நாட்டில் உள்ள மாநிலங்களில் உள்ள நீதிபதிகளில் 79 சதவீதம் பேர், மக்கள்தொகையில் 10 சதவீதம் மட்டும் இருக்கும் உயர் சாதியை சேர்ந்தவர்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 34 பேரில் 34 சதவீதம் பேர் குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். அவர்கள் வர வேண்டாம் என கூறவில்லை. மற்ற வகுப்பினருக்கும் வாய்ப்பு தர வேண்டும்.

நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியத்தின் ஆவணங்கள் யாருடைய பார்வைக்கும் கிடைப்பதில்லை. ரகசியமாக வைக்கப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது 10 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த ஆண்டு 25 முதல் 30 நீதிபதிகள் நியமனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. அதில் சமூகநீதியை பின்பற்றி அனைத்து சாதியினரும் நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும்.

நீதிபதி விக்டோரியா கௌரி பாஜக பின்புலம் கொண்டவர். அவருக்கு நீதிபதிக்கான தகுதி இல்லை என வழக்கறிஞர்கள் புகார்கள் அனுப்பினர்.
ஆனால் ஏற்கனவே பரிந்துரை செய்துவிட்டோம் என கூறிவிட்டனர். ஆனால் நீலகண்டனை நீதிபதியாக நியமிக்கவில்லை. ஏனெனில் அவர் திமுகவை சேர்ந்தவர். இனியாவது சமூகநீதியை கடைபிடிக்க வேண்டும். ஒரு சிறிய குழுவுக்கு அதிமுக்கியத்துவம் வழங்குவதை தவிர்க்க வேண்டும்.

பெண்கள், அனைத்து சமூக மக்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். கொலிஜியம் பரிந்துரை செய்தும் நீதிபதிகளாக நியமனம் செய்யாமல் உள்ள ஜான் சத்யன், அமீத், நீலகண்டன் ஆகியோரை நீதிபதிகளாக நியமனம் செய்ய வேண்டும். 75 ஆண்டுகளில் மக்கள்தொகையில் அதிகமாக உள்ள மக்களின் பிரதிநிதிகள் OBC, SC, ST, Women, Minority போன்றவர்களுக்கு உயர்நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை.

ஒரு குறிப்பிட்ட சித்தாந்தம் கொண்ட சங்கிகள் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர். பல சமூகங்களை சேர்ந்தவர்கள் இதுவரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருந்ததே இல்லை. 2018 ஆண்டு முதல் 2023 வரை நடைபெற்ற நீதிபதி நியமனங்களில் 601 பேரில் 457 பேர் உயர் வகுப்பை சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் இருந்து sc வகுப்பை சேர்ந்த ஒருவர் தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக சென்றுள்ளார். கேரளாவில் இருந்து உச்ச நீதிமன்றம் சென்ற 18 பேரில் ஒருவர் கூட பிற்படுத்தபட்டவர்கள் இல்லை.

மத்திய அரசுக்கு இணக்கமாக இருப்பவர்கள் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர். நீதிபதிகளை கொலிஜியம் நியமிப்பதில்லை. கொலிஜியம் பெயரை பயன்படுத்தி மத்திய அரசு தான் நீதிபதிகளை நியமிக்கிறது. வருமானவரி துறை, அமலாக்க துறை போன்று நீதித்துறையும் மத்திய அரசு கையில் எடுத்துக் கொள்கிறது. நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றி பன்முகத் தன்மையை கடைபிடிக்கப்பட வேண்டும் .

இவ்வாறு ஓய்வு பெற்ற நீதிபதிகள் சந்துரு மற்றும் ஹரி பரந்தாமன் ஆகியோர் குற்றம்சாட்டினர்.

ABOUT THE AUTHOR

...view details