தமிழ்நாடு

tamil nadu

தமிழ் மொழிக்கு பிரதமர் செய்தது என்ன? - ஸ்டாலினின் இந்தி திணிப்பு பேச்சுக்கு எல்.முருகன் பதில்! - Union Minister L Murugan

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 30, 2024, 9:26 PM IST

Updated : Mar 30, 2024, 10:11 PM IST

L.Murugan criticized stalin: பிரதமர் இந்தி திணிப்பில் ஈடுபடுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதற்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழை வைத்து, தமிழ் மொழியை வைத்து பிழைப்பு நடத்த எத்தணிக்க வேண்டாம் என கூறியுள்ளார்.

முதலமைச்சருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் பதில்
தமிழ் மொழியை வைத்து பிழைப்பு நடத்த எத்தனிக்க வேண்டாம்

தமிழ் மொழிக்கு பிரதமர் செய்தது என்ன?

கோயம்புத்தூர்: கடந்த மார்ச் 25ஆம் தேதி நீலகிரியில் பாஜக, மற்றும் அதிமுகவினர் ஒரே நேரத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தனர். அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால், போலீசார் தடியடி நடத்தியதில் பாஜகவினருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

காயமடைந்த பாஜக தொண்டர்கள், கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காயமடைந்த பாஜக தொண்டர்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் பார்த்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கடந்த 25ஆம் தேதி நீலகிரியில், பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தோம். நாங்கள் மனுத் தாக்கல் செய்ய உள்ளே சென்றிருந்த நேரத்தில், காவல்துறை நடத்திய தடியடியில் முரளிதரன் என்பவர் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு, தலையில் அடிபட்டு சிகிச்சைக்காக பிஎஸ்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு இடதுபுற மூளையில் அடிபட்டிருப்பதால், அறுவை சிகிச்சை செய்திருக்கின்றனர். அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது. திமுகவின் காவல்துறை பாஜகவின் தொண்டர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் கூட அன்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த இருவர், நேற்று தான் உதகை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்கள்.

ஊட்டி காவல்துறை இங்கு ஐசியுவில் இருக்கும் நபருக்கு கூட தொல்லை கொடுத்திருக்கின்றனர். திமுக காவல்துறை இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டி இருக்கும். பொதுமக்களை பாதுகாக்க வேண்டியது தான் காவல்துறை வேலை. ராசா வீட்டுக்கும், ஸ்டாலின் வீட்டுக்கும் வேலை செய்வதற்கு காவல்துறை இல்லை. காவல்துறை பொதுமக்களை பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

பிரதமர் இந்தி திணிப்பில் ஈடுபடுவதாக முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருப்பது குறித்து பேசிய அவர், “தமிழைப் போற்றுவது பிரதமர் நரேந்திர மோடி. கடந்த 10 ஆண்டுகளில் திருக்குறளை மட்டும் 35 மொழிகளில் மொழிப்பெயர்த்து வெளியிட்டு இருக்கிறார்.

பாரதியாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. காசி தமிழ் சங்கம் மூலம், தமிழ்நாட்டிற்கும், காசிக்குமான உறவை வெளிப்படுத்தி இருக்கிறார் பிரதமர். ஐநா சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று, தமிழ் தான் உண்மையான மொழி என உலகம் முழுவதும் சொல்லி வந்தவர் பிரதமர்.

தமிழர்களின் பாரம்பரியம், நீதி, நேர்மை தவறாத ஆட்சி பரிபாலனை எடுத்துக்காட்டு புனிதமான செங்கோல். அந்த செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவியதுடன், தமிழ்நாட்டில் இருந்து அனைத்து ஆதீனங்களையும் புடைசூழ தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். ஆனால் நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்தது திமுக.

பாரா மிலிட்டரி தேர்வுகளை தமிழில் எழுதலாம் என்ற அரசாணையை கொடுத்தது பிரதமர். செம்மொழிக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் ஆய்வுக்கு நிதி ஒதுக்கீடு செய்தவர் பிரதமர். எனவே, தமிழை வைத்து, தமிழ் மொழியை வைத்து பிழைப்பு நடத்த எத்தணிக்க வேண்டாம் என ஸ்டாலினுக்கு சொல்லிக் கொள்கிறேன்” என பேசியுள்ளார்.

இதையும் படிங்க: “சங்பரிவார் அமைப்புகளின் கட்சி அலுவலகமாக தேர்தல் ஆணையம்” - பானை சின்னம் கிடைத்த பிறகு திருமாவளவன் சாடல்! - Thirumavalavan

Last Updated : Mar 30, 2024, 10:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details