தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்டையார்பேட்டையில் 1,700 ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பில் உள்ள 1,700 ஆக்கிரமிப்புக்களை அகற்றாத அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புக்களை 8 வாரங்களில் அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

சென்னை:சென்னை, தண்டையார்பேட்டை, வ.உ.சி. நகரில் உள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பில், அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவிடக் கோரி தூயமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவுக்கு பதில் அளிக்கும் படி நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் செயலாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், "கடந்த 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த பகுதியில் 1,700 ஆக்கிரமிப்புக்கள் இருப்பதாகவும், சிதிலமடைந்த நிலையில் உள்ள இந்த குடியிருப்புக்களை இடித்துவிட்டு மீண்டும் கட்டிக் கொடுக்க திட்டமிட்ட போதும், குடியிருப்பு வாசிகள் காலி செய்ய மறுத்து வருவதால் அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. எனவே ஆக்கிரமிப்புக்கள் விரைவில் அகற்றப்படும்" என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க:வழக்குகளை இழுத்தடிக்கும் காவல் அதிகாரிகளுக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் ஆணை!

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 1,700 ஆக்கிரமிப்புக்கள் இருப்பதாக அரசு கூறியது குறித்து தெரிவித்த நீதிபதிகள், "இந்த ஆக்கிரமிப்புக்கள் குறித்து இரண்டரை ஆண்டுகளுக்கு முன் தகவல் தெரிந்தும், அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காதது அதிகாரிகளின் கடமை தவறியது மட்டுமல்லாமல், அலட்சியத்தையே காட்டுகிறது" என அதிருப்தி தெரிவித்தனர்.

இதையடுத்து, 1700 ஆக்கிரமிப்புக்களையும் எட்டு வாரங்களில் அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்புக்களை அகற்றும் போது, சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் உறுதி செய்வதற்கு போதுமான காவல்துறை பாதுகாப்பை வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டனர்

ABOUT THE AUTHOR

...view details