தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் போலீஸ் விசாரணையில் உயிரிழந்ததாக புகார்! - Police Investigation Death Issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 10:31 PM IST

Police Investigation Death: பாஜக நிர்வாகி பி.பி.ஜி.டி சங்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தகுமார் என்பவர், போலீஸ் விசாரணையில் உயிரிழந்ததாக சம்பந்தப்பட்டவரின் உறவினர்கள் பூந்தமல்லி உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

a man arrested in murder case and dies in police investigation in Chennai
a man arrested in murder case and dies in police investigation in Chennai

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த, வளர்புரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், பாஜக நிர்வாகியுமான பி.பி.ஜி.டி.சங்கர் கடந்தாண்டு காரில் நசரத்பேட்டை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது, காரின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி வார்டு உறுப்பினராக இருந்த சாந்தகுமார் (29) உட்பட ஏழு பேரை நசரப்பேட்டை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சிறையில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியே வந்த சாந்தகுமார் மற்றும் அவருடன் இருந்தவர்கள், செவ்வாய்பேட்டையில் உள்ள நண்பரின் வீட்டில் தங்கி இருந்தார். இதனை அடுத்து, இந்த வழக்கு தொடர்பாக சாந்தகுமார் உள்ளிட்ட ஏழு பேர் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் சென்ற போலீசார், சாந்தகுமார் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து, செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து சரமாரியாகத் தாக்கியதில் சாந்தகுமார் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதனை அடுத்து, அவரது உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் தாக்கியதால் தனது கணவர் இறந்து போனதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர், உயிரிழந்த சாந்தகுமாரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், சாந்தகுமாரை போலீசார் கைது செய்த இடத்தில் பதிவான கண்காணிப்புக் கேமரா காட்சிகள் மற்றும் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வழக்கு விசாரணைக்காக பாதுகாத்து தரவேண்டும் என அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் உறவினர்கள், பூந்தமல்லி உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

இது குறித்து உயிரிழந்த சாந்தகுமாரின் மனைவி கூறுகையில், “எனது கணவரை வேண்டுமென்றே பணத்தைப் பெற்றுக் கொண்டு போலீசார் கொலை செய்துவிட்டனர். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு எங்களுக்கு நீதி வழங்க வேண்டும். அதுவரை, எனது கணவரின் உடலை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கொலை வழக்கில் சிறையில் இருந்து வந்தவர் போலீஸ் விசாரணையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், கண்காணிப்புக் கேமரா காட்சிகளின் பதிவுகளைக் கேட்டு, அவரது மனைவி மற்றும் உறவினர்கள் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:வாக்களிக்க ஜப்பானிலிருந்து பறந்து வந்த தமிழர்; பிரதமரால் இந்தியர்களுக்கு மதிப்பு கூடியுள்ளதாகப் பெருமை!

ABOUT THE AUTHOR

...view details