சென்னை: சென்னையில் கடந்த மாதம் 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், இதுவரை 20க்கும் மேற்பட்ட நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவரை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியும், வழக்கறிஞருமான அஸ்வத்தாமனை விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர். விசாரணையில், இவர் சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த ரவுடி நாகேந்திரன் என்பவரின் மகன் என்பதும், ஆம்ஸ்ட்ராங் கொலையில் சதி திட்டம் தீட்டியதும், கொலையாளிகளுக்கு பண உதவி செய்ததும் தெரியவந்தது.
இதனிடையே, அஸ்வத்தாமனை காவலில் எடுத்து விசாரித்தால் இன்னும் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என செம்பியம் தனிப்படை போலீசார் திட்டமிட்டு வந்ததாகக் கூறப்பட்டது. அதனை அடுத்து, அஸ்வத்தாமனை காலில் எடுத்து விசாரிக்க வேண்டி எழும்பூர் நீதிமன்றத்தில் தனிப்படை போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.