தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தவெக மாநாட்டில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது" - நிர்வாகிகளுக்கு காவல்துறை அறிவுறுத்தல்!

தவெக மாநாடு நடைபெறும் மாநாட்டுப் பந்தல் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் 27ம் தேதி அன்று பட்டாசு வெடிக்கக் கூடாது என நிர்வாகிகளுக்கு காவல்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநாடு ஏற்பாடுகள், பட்டாசு வெடிப்பு தொடர்பான கோப்புப்படம்
மாநாடு ஏற்பாடுகள், பட்டாசு வெடிப்பு தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

சென்னை : தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் வரும் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மாநாட்டுக்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

மாநாட்டிற்கு மாநிலம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டுத் திடல் பகுதியில் சுமாா் 75 ஆயிரம் நாற்காலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவை ஞாயிற்றுக்கிழமை காலை முதல் போடப்படவுள்ளன. மேலும், மாநாட்டுப் பகுதியில் சுமாா் 300 நடமாடும் கழிப்பறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, பெரியார், காமராஜர், பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரின் கட்-அவுட்டுகளுடன் விஜய்யின் கட் அவுட்டும் வைக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து தொடர்ந்து தமிழன்னை, சுதந்திரப் போராட்டத் தியாகிகள் போன்றோரின் கட் அவுட்டுகளும் வைக்கப்பட உள்ளது.

மாநாட்டு முகப்புப் பகுதியில் அதி உயர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர வாகன நிறுத்துமிடங்கள், இதரப் பகுதிகள், மாநாட்டுத் திடல் மற்றும் வெளிப்பகுதிகள் என பல்வேறு இடங்களில் சுமாா் 1,100 (ஹை பீம்) மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

மாநாட்டுப் பாதுகாப்புப் பணியில் வடக்கு மண்டல ஐ.ஜி.அஸ்ரா கர்க், விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல், 10 எஸ்பி-க்கள், 15 ஏடிஎஸ்பி-க்கள், 50 டிஎஸ்பி-க்கள் உட்பட 5500க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும், மாநாடு நடைபெறும் நாளில் கட்சியின் தலைவா் விஜய் வரும் பகுதிகளை கடலூா் மாவட்ட எஸ்.பி ராஜாராம் நேற்று ( அக் 24) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த வழிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

இதையும் படிங்க :"தளபதிக்கு அடுத்த இடத்தில் இருக்கேன்".. திடீரென கடுப்பான புஸ்ஸி ஆனந்த்!

விழுப்புரம் கூடுதல் எஸ்.பி திருமால், விக்கிரவாண்டி டிஎஸ்பி நந்தகுமார் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனா். இதேபோல, பொதுப் பணித்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அலுவலா்களும் மாநாடு நடைபெறும் பகுதியைப் பார்வையிட்டு, ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் தவெக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் சில அறிவுறுத்தல்களை மின்வாரிய தலைமை பொறியாளர் மணிமேகலை வழங்கியிருக்கிறார். விஜய் கட்சி மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள், வாகனங்களின் மேல் அமர்ந்து கொண்டு கொடி பிடித்து வரக்கூடாது. இதனால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அதேபோல மாநாட்டிற்கு மின்வாரியத்தில் இருந்து மின்சாரம் பெறவில்லை என்றும், மாநாட்டிற்கு 60 உயர் ரக ஜெனரேட்டர் மூலம் மின்சாரமே முழுமையாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், மின் வாரியத்திற்கு பணம் செலுத்தியதால் மாநாட்டுத் திடலில் இருந்த மின் கம்பிகள் தற்காலிகமாக அகற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் மாநாடு நடைபெறும் மாநாட்டுப் பந்தல் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் 27ம் தேதி அன்று பட்டாசு வெடிக்கக் கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மாநாட்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடுவார்கள் என்பதால் தொலைத்தொடர்பு வசதி கிடைக்கப் பெறுவதில் காலதாமதம் ஏற்படலாம் என்பதனை கருத்தில் கொண்டு தற்போது மாநாட்டு திடல் அருகே தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details