தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூரில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்.. மக்கள் கடும் அவதி!

திருப்பூரில் பெய்த கனமழையால் பழவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் குழந்தைகளுடன் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

வீடுகளுக்குள் மழைநீர் புகுந்த காட்சி
வீடுகளுக்குள் மழைநீர் புகுந்த காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

திருப்பூர்:வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையும், தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களில் விட்டு விட்டு மழையும் பெய்து வருகிறது. அந்த வகையில், திருப்பூரில் வீரபாண்டி, காந்திநகர், அங்கேரி பாளையம், பாளையக்காடு, நல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.

தொடர்ந்து பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளுக்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதனால், வீரபாண்டி அடுத்த பழவஞ்சிபாளையம், காலனி பகுதியில் தண்ணீர் சூழ்ந்து, அப்பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் முழங்கால் அளவிற்கு மழை நீர் புகுந்துள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் குழந்தைகளுடன் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், "கடந்த 40 ஆண்டுகளாக சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்கள் குழந்தைகளுடன் இப்பகுதியில் வசித்து வருகின்றோம். ஆனால், இதற்கு முன்னர் வரை மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது கிடையாது. தற்போது குட்டை பகுதியில் புதிதாக வீரபாண்டி காவல்நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதற்காக அப்பகுதியில் மண் கொட்டி மேடாக மாற்றியுள்ளனர். அதனால், கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த மழைக்கும் வீட்டுக்குள் மழைநீர் புகுந்தது. தற்போது மீண்டும் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது" எனத் தெரிவித்தனர்.

வீடுகளுக்குள் மழைநீர் புகுந்த காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: "கொட்டும் மழையிலும் டாஸ்மாக் கடைகள்.. இதுதான் திராவிட மாடல் சேவையா?" - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

மேலும், குட்டை இருந்த பகுதியில் காவல்நிலையம் கட்டப்பட்டுள்ளதால் தான், தண்ணீர் வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் புகுந்துள்ளது எனவும், தற்போது, மழைக்காலம் துவங்கிவிட்டதால், எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்குள் தண்ணீர் வரும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வீரபாண்டி போலீசார் மற்றும் வட்டாட்சியர் மயில்சாமி சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்ததையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர். அதைத் தொடர்ந்து வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் அப்பகுதியைச் சார்ந்த 40 குடும்பங்களும் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details