சென்னை: இந்திய சினிமாவில் இயக்குநராகவும், ஒளிப்பதிவாளராகவும் வலம் வருபவர், பி.சி.ஸ்ரீராம். இவர் வா இந்த பக்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி, தனது பயணத்தைத் தொடங்கினார்.
அதன்பின், மணி ரத்னம் இயக்கத்தில் மெளனராகம் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். கடந்த 1995ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த குருதிப்புனல் படத்தினை பி.சி.ஸ்ரீராம் இயக்கினார். இந்தப் படம் அனைவராலும் பெரிதும் பேசப்பட்டது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதையும் நாயகன் படத்திற்காக அவர் பெற்றார்.
இந்நிலையில், நேற்று (பிப்.12) தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. அதில் ஆளுநர் தனது உரையை சில நிமிடங்களில் முடித்து விட்டு, தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னால் வெளியேறிச் சென்றார். இது குறித்து, பி.சி.ஸ்ரீராம் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் ஏற்கத்தக்கது அல்ல எனவும், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் எனவும், இந்த பதிவிற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.