சென்னை:சென்னையில் இருந்து இரவு சிங்கப்பூர் செல்லவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் நேற்று (மே 22) இயந்திரக் கோளாறு ஏற்பட்டதையடுத்து விமானம் மூன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
சிங்கப்பூர்-சென்னை-சிங்கப்பூர் இடையே இயக்கப்படும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தினமும் இரவு 10 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துவிட்டு, அதன் பின் இரவு 11.15 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் செல்லும். இந்த விமானத்தில் சிங்கப்பூர் செல்லும் பயணிகள் மட்டுமின்றி, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் பயணிகளும் அதிக அளவில் பயணிப்பதால், இந்த விமானத்தில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும்.
அதேபோல், நேற்று (மே 21) இரவு சிங்கப்பூரில் இருந்து அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு 5 நிமிடம் முன்னதாகவே இரவு 9.55 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துவிட்டது. அந்த விமானம் மீண்டும் இரவு 11.15 மணிக்கு,சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் செல்லவிருந்தது. அந்த விமானத்தில் சிங்கப்பூர் செல்வதற்காக சுமார் 320 பயணிகள் காத்திருந்தனர். விமானம் வந்ததும் பயணிகள் விமானத்தில் ஏறத் தயாராகியுள்ளனர்.
பயணிகளை விமானத்தில் ஏற்றுவதற்கு முன்னதாக, விமானி விமானத்தின் இயந்திரங்களை சரிபார்த்த போது, தொழில்நுட்பக் கோளாறு இருப்பது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து விமானி, பயணிகளை விமானத்தில் ஏற்றாமல், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்துக்குள் ஏறி தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.