திருவண்ணாமலை: சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பரதேசி ஆறுமுக சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் நேற்று 188வது ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஏராளமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிடும் வினோத வழிபாடு நடைபெற்றது.
அதாவது, கோட்டுப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பரதேசி ஆறுமுக சுவாமி திருக்கோயில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு, பெண்கள் குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று இக்கோயிலில் மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
முன்னதாக, ஸ்ரீ பரதேசி ஆறுமுக சுவாமி கோயிலில் பக்தர்கள் காவடி எடுத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, யாகசாலை அமைத்து ஏராளமான பெண்களை அமர வைத்து சிறப்புப் பூஜை நடைபெற்றது. பின்னர், குழந்தை வரம் வேண்டி கலந்து கொண்ட பெண்கள், சாதுக்களிடம் பிரசாதங்களை தங்கள் முந்தாணியில் பயபக்தியுடன் பெற்றுக் கொண்டு, கோயில் அருகே உள்ள குளக்கரையில் புறங்கை கட்டி, மண்டியிட்டு மண் சோறு சாப்பிட்டு வினோத வழிபாடு நடத்தினர்.