தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நள்ளிரவு 1 மணி வரை கடைகள் திறந்திருக்கலாம்..கோவை போலீஸ் அனுமதி!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை மாநகரில் துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து வணிக கடைகளும் நள்ளிரவு ஒரு மணி வரை செயல்படலாம் என்று கோவை மாநகர காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

கோப்புப்படம் மற்றும் கோவை மாநகர காவல்துறையின் அறிவிப்பு
கோப்புப்படம் மற்றும் கோவை மாநகர காவல்துறையின் அறிவிப்பு (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

கோயம்புத்தூர்:தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில், தீபாவளிக்கு இன்னும் 7 நாட்கள் மட்டுமே இருப்பதால், புத்தாடைகள் வாங்குவதற்காக தமிழ்நாடு முழுவதும் முக்கிய கடை வீதிகளில் மக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.

அந்த வகையில், கோவையில் உள்ள கடைவீதிகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக துணிக்கடைகள், நகைக்கடை உள்ளிட்ட கடைகளில் அதிக அளவு மக்கள் கூட்டம் மாலை வேளைகளில் காணப்படுகின்றனர்.

இதுமட்டும் அல்லாது, பொதுமக்கள் அனைவரும் குடும்பமாக வந்து பண்டிகைக்காக புத்தாடைகளை வாங்கி வருகின்றனர். அதிலும் இந்த ஆண்டு வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, விதவிதமான பல்வேறு டிசைன்களில் ஆடைகள் வந்துள்ளதால் பல துணிக்கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுகிறது.

இத்தகைய சூழலில், கூட்டம் அதிகமாக காணப்படுவதால் மக்கள் கடைகளுக்கு வெளியே காத்திருந்தும் பொருட்களை வாங்கி சென்றனர். மேலும், சாலையோர கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் காணப்படுகிறது.

அதிலும் குறிப்பாக கோவையில் உள்ள முக்கிய கடைவீதிகளான ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் நிலையில், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு வியாபார நிறுவனங்களின் நேரத்தை அதிகரிப்பது குறித்த அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (அக்.23) நடைபெற்றது.

இதையும் படிங்க:விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? தீயணைப்பு துறையினர் தரும் டிப்ஸ்!

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து விதமான வியாபார நிறுவனங்களும் வழக்கமான நேரத்தை விட கூடுதலாக நள்ளிரவு ஒரு மணி வரை செயல்பட அனுமதி அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் இந்த கூடுதல் நேரத்தை பயன்படுத்தி, இரவு நேரத்தில் வியாபார நிறுவனங்களுக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கி சொல்லவும், இரவு நேரத்தில் வரும் பொது மக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுமட்டும் அல்லாது, பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்படுவதால் திருட்டு சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று தெரிவித்துள்ளதோடு, கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் மக்கள் கவனமாக இருக்குமாறும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details