திருப்பூர்: தாராபுரம் பாப்பனூத்து பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (29). இவர் காற்றாலை மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில்., ராதாகிருஷ்ணனுக்கு குடி பழக்கம் இருந்ததால் அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து ராதாகிருஷ்ணனுக்கு மறுமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வந்தனர்.
கேரள வரன்: இதனை தெரிந்து கொண்ட கேரள மாநிலம் கொழிஞ்சம்பாறை பகுதியை சேர்ந்த திருமண புரோக்கர் ஒருவர் ராதாகிருஷ்ணனை அணுகினார். அப்போது அவர் கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை ராதாகிருஷ்ணனிடம் காண்பித்தார். அந்த படத்தில் இருந்த பெண்ணை ராதாகிருஷ்ணனுக்கு ரொம்பவே பிடித்து விட்டது. இதையடுத்து தடல்புடலாக அந்த பெண்ணை ராதாகிருஷ்ணனுக்கு பேசி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அப்போது பெண் வீட்டில் வசதி இல்லாததால் உதவி செய்யும்படி புரோக்கர் கேட்டுக்கொண்டுள்ளார். இதை ஏற்றுக்கொண்ட ராதாகிருஷ்ணன் வீட்டார் அந்தப் பெண்ணுக்கு ஒன்றரை பவுனில் நகை வாங்கி போட்டுள்ளனர். மேலும், புரோக்கருக்கு கமிஷன் தொகையாக 80 ஆயிரம் ரூபாயையும் கொடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து குறித்த தேதியில் ராதாகிருஷ்ணனுக்கும், அந்த பெண்ணுக்கும் உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேசுவரர் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. பின்னர் அவர்கள் தாராபுரத்திற்கு வந்தனர். அங்கு முதலிரவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
முதலிரவில் ஏமாற்றம்:ஆனால், முதலிரவின்போது புதுப்பெண், ராதாகிருஷ்ணனிடம் "தனக்கு மாதவிடாய் என்றும், மற்றொரு நாள் முதலிரவை வைத்து கொள்வோம்" என்றும் கூறி நைசாக முதலிரவை தவிர்த்துவிட்டார். அதேபோல, மறுநாள் ''தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க செல்ல வேண்டும்'' என்று தெரிவிக்கவே ராதாகிருஷ்ணன் தனது மனைவியை பொள்ளாச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
புரோக்கர் கணவன்: பொள்ளாச்சிக்கு சென்றதும் அந்த கேரள பெண் திடீரென மாயமாகிவிட்டார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் சோகத்துடன் தாராபுரத்திற்கு வந்த ராதாகிருஷ்ணன் நடந்த விவரத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், நகை, பணத்திற்காக ராதாகிருஷ்ணனை ஏமாற்றி கேரள பெண் திருமணம் செய்து இருப்பது தெரிய வந்தது. மேலும் ,அந்தப் பெண்ணின் கணவர் தான் திருமண புரோக்கர் போல செயல்பட்டதும் அம்பலமானது. இது ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்துக்கு பேரிடியை கொடுத்தது.
மேலும், அந்த புரோக்கர் திருமணம் ஆகாத பல வாலிபர்களிடம் பணம் மற்றும் நகையை பறிப்பதற்காக தனது மனைவியையே வேறு வாலிபர்களுக்கு திருமணம் செய்து வைத்து முதலிரவு அன்று மாப்பிளைக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு பொருட்களை சுருட்டி செல்லும் நூதன மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள பெண்ணுக்கு குழந்தையும் உள்ளதாம். இருப்பினும் அவர்கள் பணத்திற்காக இந்த நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போலீசில் சிக்காமல் இருக்க தங்களது பெயரை மாற்றி கொடுத்து ஏமாற்றி வந்துள்ளனர். இதையடுத்து தாராபுரம் போலீசார் திருமண புரோக்கரையும், அவரது மனைவியையும் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:வீடியோ போடாதீங்க ப்ளீஸ்'.. ஆபாச ஆங்கரால் இளம்பெண் தற்கொலை முயற்சி.. யூடியூபர்ஸ் கைது..!