தஞ்சாவூர்: காவிரி தென்கரை தலங்களில் 26வது திருத்தலமாகவும், பிரளயத்திற்கு பிறகு, உலக தோன்றுவதற்கு ஆதிகாரணமாகிய பராபரம் கும்பத்தில் இருந்து தோன்றியதால் இத்தலம் ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோயில் என்று போற்றப்படுகிறது. இக்கோயில் 12 ஆண்டுகளுக்கு ஓர் முறை நடைபெறும் உலக பிரசித்தி பெற்ற மகாமகப் பெருவிழாவிற்கான பிரதான சைவத்தலமாகும். இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலுக்கு கடைசியாக, கடந்த 2009ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனையடுத்து 14 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2023ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் செய்திட முடிவு செய்து, அறநிலையத்துறை ரூபாய் 4.75 கோடி, கோயில் நிர்வாகம் ரூபாய் ஒரு கோடியும், அறங்காவலர்கள் குழு சார்பில் ரூபாய் 50 லட்சம் மற்றும் உபயதாரர்கள் மூலம் திருப்பணிகள் செய்ய திட்டமிடப்பட்டு, கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்க பாலாலயம் செய்யப்பட்டது. தற்போது திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆதிகும்பேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்வதற்காக, கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான 54 அடி நீள பெரிய தேக்கு மரம் 18 சக்கரங்கள் கொண்ட நீளமான டாரஸ் லாரியில் நேற்று கொண்டு வரப்பட்டது. இந்த தேக்கு மரத்தை இரண்டு ராட்சத கிரேன்கள் மூலமாக கோயில் மதில் சுவர் உயரத்தை தாண்டி தூக்கி, கோயில் உள்புறம் வடக்கு பிரகாரத்தில் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டது.
ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோயிலுக்கு 54 அடி நீள தேக்கு மரம் வரவழைப்பு (Credits - ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க: ”2026 தேர்தலிலில் பாமக கூட்டணி அமைத்தே போட்டியிடும்” - ஜி.கே.மணி பேட்டி - GK MANI ABOUT PMK ALLIANCE
ஆதிகும்பேஸ்வரசுவாமி கோயிலில் உள்ள கொடிமரம் சேதமடைந்ததால், புதிய கொடிமரம் அமைக்க திருப்பணிக்குழுவினர் முடிவெடுத்ததன் பேரில், இந்த 54 அடி நீளம் கொண்டு பிரமாண்டமான தேக்கு மரம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மரத்தை 48 அடி உயரம், 2 அடி விட்டத்தில் கொடிமரமாக தயார் செய்யப்பட்ட பிறகு, உபயதாரர் மூலம் ஏற்கனவே உள்ள பழைய செப்பு கவசத்தில் தங்க முலாம் பூசி, புதிய கொடிமரத்தில் சாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. கொடிமரப் பணிகள் முழுமை பெற்ற பிறகு, புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு, கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் சார்பில் அறநிலையத்துறை அலுவலர்கள் அளித்தனர்.