திருப்பூர்:தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட “என் மண் என் மக்கள்” பாத யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, எம்.ஜிஆர், ஜெயலலிதா குறித்து பேசியுள்ளார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிரதமர் மோடி, திருப்பூர் பல்லடம் பகுதியில், இன்று (பிப்.27) நடைபெற்ற “என் மண் என் மக்கள்” பாத யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது விழாவில் பேசிய பிரதமர் மோடி, “இன்று தமிழகம் வந்துள்ள நான், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை நினைத்து பார்க்கிறேன். ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி போன்றவற்றை செய்தவர், எம்.ஜிஆர். அதனால்தான் அவர் இப்போது வரை மக்களால் நினைத்து பார்க்கப்படுகிறார்.
அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரை அவமதிப்பது போல திமுக ஆட்சி நடைபெறுகிறது. எம்.ஜி.ஆரைப் போலவே ஜெயலலிதாவும் மக்கள் மனதில் நிலை பெற்றுள்ளார். ஜெயலலிதாவுடன் நட்புறவுடன் பழகியவன் என்ற முறையில் நான் கூறுகிறேன். ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களோடு எந்த வகை தொடர்பு கொண்டிருந்தார் என்பது எனக்கு தெரியும்.