ETV Bharat / state

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி.. திருப்பூர், மதுரை, நெல்லை நிகழ்ச்சிகள் என்னென்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2024, 12:06 PM IST

PM Modi Tamil Nadu visit: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடக்கும் 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடி, மதுரை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நலத்திட்டப்பணிகளைத் தொடங்கி வைக்க உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

திருப்பூர்: தமிழ்நாட்டில் பாஜக மாநில தலைவர், பிரதமர் மோடியின் சாதனைகளை மக்களிடையே எடுத்துரைக்கும் விதமாக மேற்கொண்டு வந்த 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் நிறைவு விழா இன்று (பிப்.27) திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார்.

திருப்பூர் மாவட்ட காவல் காண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, பிரதமர் மோடியின் வருகையையொட்டி, மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்துள்ளார். அதேபோல, சூலூர் - பல்லடம் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மோடியின் வருகையையொட்டி, கோவை, திருப்பூர் மாவட்ட போலீசார் இணைந்து பல்லடம் மாதப்பூரில் உள்ள மைதானம் முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் மேற்கொண்டு வந்த 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறுகிறது. இதற்காக அண்ணாமலை, இன்று காலை 9:00 மணிக்கு திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தொகுதிகளுக்கான தனது பயணத்தை தொடங்கினார். இதைத்தொடர்ந்து, பல்லடம் மாதப்பூரில் நடக்கும் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

முன்னதாக, இந்த நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக, திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு மதியம் 2:05 மணியளவில் பிரதமர் மோடி வருகை தருகிறார். அதன் பின்னர், தனி ஹெலிகாப்டர் மூலம் பல்லடத்திற்கு 2:35 மணியளவில் வர உள்ளார். இதைத்தொடர்ந்து, அங்கிருந்து அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை நிறைவு விழா நடக்கும் மாதப்பூருக்கு வர உள்ளார்.

இதையடுத்து, அங்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும் பிரதமர் மோடி, மதியம் 2:45 மணி முதல் 3:45 மணி வரை சிறப்புரையாற்றுகிறார். அதன்பிறகு, மாலை 5:00 மணிக்கு மதுரை செல்கிறார். மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். பின்னர், தனியார் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மதுரையில் தனியார் விடுதியில் தங்குகிறார்.

இதனையடுத்து, மறுநாள் (நாளை) ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடிக்குச் சென்று அங்கு புதிய நலத்திட்டப்பணிகளை தொடங்கிவைக்க உள்ளார். அடுத்தப்படியாக, திருநெல்வேலியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் காலை 11:15 மணி முதல் 12.15 மணிவரை பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இது திருநெல்வேலிக்கு பிரதமர் மோடி வருவது முதல்முறையாகும். இந்நிகழ்ச்சிகளுக்குப் பின்னர், பிரதமர் மோடி மீண்டும் தனி ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்ல உள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதேபோல, திருப்பூரில் நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில் மாற்று கட்சிகளைச் சேர்ந்தவர் உள்ளிட்டப் பலரும் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: நெல்லை வரும் பிரதமர் மோடி நெல்லையப்பர் ஆவரா? - இந்து முன்னணியினர் உள்ளிட்டோர் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.