சென்னை: சென்னை நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மாயமாகி உள்ளார். இந்த சிறுமி தஞ்சை பகுதிக்கு வந்து இருக்கலாம் என்று தஞ்சை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அந்த சிறுமியின் புகைப்படத்தை வைத்து தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தஞ்சை புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஒரு இளைஞருடன் அந்த சிறுமி நிற்பதை ரோந்து போலீசார் பார்த்தனர். உடனடியாக அந்த சிறுமி மற்றும் அவருடன் இருந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளைஞர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதையடுத்து இரண்டு பேரையும் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர். பின்னர் சிறுமியிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
விசாரணையில் கிடைத்த தகவலில், தஞ்சை மாவட்டம் திருவோணம் சின்ன கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (24). கூலி தொழிலாளியான இவருக்கு சென்னையில் வேலை பார்த்த போது இந்த சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமியை ஜெகதீஸ்வரன் காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.
தஞ்சைக்கு புறப்பட்ட சிறுமி
இதை சிறுமி நம்பி அவருடன் பழகி வந்துள்ளார். ஜெகதீஸ்வரன் சென்னையில் இருந்து தஞ்சையில் தனது ஊருக்கு வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமி ஜெகதீஸ்வரனிடம் செல்போனில் பேசிய போது தஞ்சைக்கு புறப்பட்டு வந்து விடுமாறு தெரிவித்துள்ளார். இதை நம்பி அந்த சிறுமி தனது வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு கடந்த 5 நாட்களுக்கு முன்பு தஞ்சைக்கு வந்துள்ளார்.
அதனை தொடர்ந்து தான் தஞ்சைக்கு புறப்பட்டது குறித்து காதலன் ஜெகதீஸ்வரனுக்கு சிறுமி தகவல் தெரிவித்துள்ளார். அதற்கு ஜெகதீஸ்வரன் தற்போது பேசிக் கொண்டிருக்கும் சிம் கார்டை கழற்றி விட்டு வேறு ஒரு சிம் கார்டை செல்போனில் போட்டு பேசு என்று தெரிவித்துள்ளார். அதேபோல் அந்த சிறுமியும் செய்துள்ளார்.
போனை எடுக்காத காதலன்
இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி தஞ்சைக்கு வந்த சிறுமி காதலன் ஜெகதீஸ்வரனிடம் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவர் செல்போனை எடுக்கவில்லை. பலமுறை தொடர்பு கொண்டும் காதலன் செல்போனை எடுக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சிறுமி செய்வதறியாது அழுது கொண்டு தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்துள்ளார்.
இதை கவனித்த ஒரு நபர் அந்த சிறுமியிடம் எதற்காக அழுகிறாய்? என்று கேட்டுள்ளார். அவரிடம் அந்த சிறுமி தன்னை பற்றிய விவரங்களை தெரிவித்துள்ளார். அதை கேட்ட அந்த நபர் சிறுமியிடம் எனது வீட்டுக்கு வந்து தங்கிக் கொள், பின்னர் உனது காதலனுடன் உன்னை சேர்த்து வைக்கிறேன் என்று அக்கறை காட்டுவது போல் பேசி உள்ளார்.
கடத்தப்பட்ட சிறுமி
இதை நம்பி அந்த நபரின் வீட்டுக்கு அந்த சிறுமி சென்றுள்ளார். அந்த சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து 3 நாட்களாக அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த சிறுமியை சென்னைக்கு அனுப்புவதற்காக பேருந்தில் ஏற்றி விட மீண்டும் புதிய பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்த போது தான் போலீசாரிடம் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து போலீசார் அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் தஞ்சை அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் (30) என்பதும் திருமணமான இவர் வீட்டில் மனைவி இல்லாத நிலையில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இது குறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து புவனேஸ்வரனை கைது செய்தனர். மேலும் சிறுமியை காதலித்து சென்னையிலிருந்து தஞ்சைக்கு வரவழைத்த ஜெகதீஸ்வரனையும் கைது செய்தனர். பின்னர் அந்த சிறுமியை பெண்கள் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
காதலனை நம்பி சென்னையிலிருந்து தஞ்சைக்கு வந்த சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தஞ்சையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.