ராணிப்பேட்டை: தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில், மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கை வாயிலாக, தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'அனைத்து மாணவர் கூட்டமைப்பு' சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று மத்திய அரசு அலுவலகங்களின் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்தி கட்டாயம் என்பதை ஏற்க முடியாது என்றும் முடிந்தால் என்னை மீறி இந்தியை திணித்து காட்டுங்கள் என மத்திய அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலந்தாய்வு கூட்டம், ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றுள்ளது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக்கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறியதாவது, "மொழி குறித்த புரிதல் பாஜவிற்கு கிடையாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்தியை திணிக்கின்றனர். மாநிலத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் நடிக்கின்றனர். நாங்கள் தமிழை காக்க துடித்து வருகிறோம். புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால், மும்மொழிக் கொள்கை தீவிரமாகும்போது திமுக அரசு அதை எதிர்ப்பது போல நாடகமாடுகிறது.
உணவு, உடை, மொழி என்பது தனிமனிதனின் விருப்பம். புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் கல்வித் துறைக்கு நிதி வழங்கப்படவில்லை என்பது சரியல்ல. நிதியை கூட கேட்டு பெற முடியாமல் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து கொண்டு என்ன பயன்," என்று சீமான் கேள்வி எழுப்பினார்.