தமிழ்நாடு

tamil nadu

பாஜகவிடம் உள்ள ‘அற்புத வாஷிங் மிஷின்’ .. ஸ்டாலின் கூறுவது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 7:42 PM IST

Tamil Nadu Chief Minister: ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பாஜக-வினர் குறித்து விமர்சித்துப் பேசியுள்ளார்.

Tamil Nadu Chief Minister
Tamil Nadu Chief Minister

சென்னை: ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “ஏற்கனவே ஊழல் புகாருக்கு ஆளான எதிர்கட்சி பிரமுகர், திடீரென பா.ஜ.க. பக்கம் சென்றுவிட்டால் உடனே அவரை புனிதராக்கி, அமைச்சர் பதவி கொடுக்கும் அளவிற்கு கறை நீக்கக்கூடிய ‘அற்புத வாஷிங் மிஷின்’ பா.ஜ.க.விடம் இருக்கிறது” என்று குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

இந்த பேட்டியின் போது, அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித் துறை போன்ற விசாரணை அமைப்புகள், மத்திய அரசின் அரசியல் கருவிகளாக மாறி வருவதையும், அது இந்தியா ஜனநாயகத்தைச் சிதைப்பதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது அந்த கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர், "அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை போன்ற சுதந்திரமான விசாரணை அமைப்புகளை மத்திய பாஜக அரசு தன் கைப்பாவையாகப் பயன்படுத்துகிறது என்பதை எதிர்கட்சிகளான நாங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டியது இல்லை. மக்களே அதைச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

பாஜக ஆட்சியல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுங்கட்சியினர் மீதுதான் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ ஆகியவை பாய்கின்றன. பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள ஊழல் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஏற்கனவே ஊழல் புகாருக்கு ஆளான எதிர்கட்சி பிரமுகர் திடீரென பாஜக பக்கம் சென்றுவிட்டால் உடனே அவரை புனிதராக்கி, அமைச்சர் பதவி கொடுக்கும் அளவிற்குக் கறை நீக்கக்கூடிய 'அற்புத வாஷிங் மிஷின்' பாஜக-விடம் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொண்டு விட்டார்கள்.

தேர்தல் நெருங்க நெருங்க பாஜக அல்லாத கட்சியினர் மீதான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளின் பாய்ச்சல்கள் இன்னும் கூடுதலாக இருக்கும். அதனை எதிர்கொள்வதற்கான வலிமை இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உண்டு. பாஜக-வை முழுமையாக அம்பலப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அது அமையும்" என்று தெரிவித்தார்.

மேலும் அதனைத் தொடர்ந்து, 2024 தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற உதவும் காரணிகளாக எவை இருக்கும்? மோடியை வெல்வது உண்மையில் சாத்தியமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "ஜனநாயக நாட்டில் யாரும் நிரந்தரமாக முடிசூட்டிக் கொள்ள முடியாது. 2004-இல் ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க நினைத்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் அதற்கு எதிர்மறையாக அமைந்தன. பத்தாண்டுக் கால பாஜக ஆட்சியில் இந்தியாவில் பெரும் தொழிலதிபர்கள் தவிர வேறு எந்த ஒரு தரப்பினரும் நிம்மதியாக இல்லை.

உழவர்கள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், மாணவர்கள், சிறுபான்மையினர், பட்டியலின மக்கள் எனப் பல தரப்பினரும் எதிர்கொள்கின்ற சிக்கல்களே இந்தியா கூட்டணிக்குச் சாதகமானதாக அமையும். யார் பிரதமராக வரவேண்டும் என்பதைவிட, மீண்டும் யார் வந்துவிடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அது தேர்தல் முடிவுகளில் தெரியும்" என்று பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க:நெல்லை அருகே பைப்லைன் அமைப்பதில் இரு குழுவினரிடையே தள்ளுமுள்ளு.. என்ன நடந்தது?

ABOUT THE AUTHOR

...view details