தூத்துக்குடி:தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தூத்துக்குடி, அண்ணாநகர் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “2014க்கு முன் கேஸ் விலை ரூபாய் 450, தற்போது 1,200 ரூபாய், இதற்கு காரணம் மோடி தான். இப்போது உங்களை ஏமாற்றுவதற்கு 100 ரூபாய் குறைப்பேன் என வடை சுட்டு கொண்டிருக்கின்றார்.
சசிகலாவின் காலை வாரிவிட்டவர் இபிஎஸ்:ஆனால், நாங்கல் சொல்வதை செய்வோம். செய்வதை தான் சொல்வோம் என்று கூறிய கருணாநிதி வழியில் வந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தொடர்ந்து சொல்வதை செய்வார். செய்வதை தான் சொல்வார். இந்தியா கூட்டணி கட்சியினர் ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய்க்கும், டீசல் 65 ரூபாய்க்கும் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளோம். டேபிளுக்கு அடியில் தவழ்ந்து போய் வெட்கமில்லாத, மானம் இல்லாத பாதம் தாங்கி பழனிசாமி, சசிகலாவின் காலை பிடித்து முதலமைச்சராகி, கடைசியில் அந்த அம்மாவின் காலை வாரி விட்டார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடியது கனிமொழி:சசிகலா யார்?, நீயா என்னை முதலமைச்சர் ஆக்கினாய் என்று தற்போது கூறி வருகின்றார். மாநில அரசின் உரிமைகளை பாஜகவுக்கு பயந்து அடகு வைத்து கல்வி, மொழி உரிமையை அடகு வைத்தவர் தான் பாதம் தாங்கி பழனிசாமி, அதை எல்லாம் மீட்டு எடுக்க வேண்டும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூட்டில் வந்து எட்டிப் பார்த்தாரா? முழுவதுமாக சட்ட போராட்டம் செய்து ஆலையை மூடியது கனிமொழி கருணாநிதி தான்.
ஓனர்களையும் அடித்து விரட்ட வேண்டும்:அப்போது முதலமைச்சராக இருந்த பாதம் தாங்கி பழனிசாமி எனக்கு தெரியாது டிவியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்றார். இப்படி ஒரு கேடுகெட்ட ஒரு முதலமைச்சரை துரத்தி அடித்தீர்கள் 2021ல், அதேபோல் அந்த அடிமைகளுடைய ஓனர்களையும் அடித்து விரட்ட வேண்டும். திமுக ஆட்சி அமைந்தால் பெட்ரோல் விலை குறைப்போம் என்றோம். அதே போல், 3 ரூபாய் குறைத்தோம். ஆவின் பால் லிட்டர் 3 ரூபாய் குறைப்போம் என்றோம், அதையும் குறைத்தோம்.
மகளிருடைய வெற்றி: மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி கொண்டு வருவோம் என்றோம். அதே போல் கொண்டு வந்தோம். மூன்று வருடத்தில் 460 கோடி ரூபாய்க்கு மகளிர்கள் பயணம் செய்து உள்ளீர்கள். இதுதான் திட்டத்தின் வெற்றி. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் ஆறு கோடி ரூபாய்க்கு பயணங்கள் மேற்கொண்டுள்ளீர்கள். இதுதான் மகளிருடைய வெற்றி. ஒரு திட்டத்தை அரசு கொண்டு வருவது முக்கியமல்ல. எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்பது தான் முக்கியம்.