ஈரோடு:ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் புதிய பேருந்துகள் இயக்க விழா நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு நாகர்கோவில், மைசூர், கோவை, தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட 15 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தனர். மேலும், வருவாய்த் துறை பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட ஜீப்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், "அதிமுக ஆட்சியில் புதிய ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தாவதில் காலதாமதம் செய்யப்பட்டது. ஆனால், திமுக ஆட்சி வந்தவுடன் தொழிலாளர்கள் மனம் மகிழும் வகையில் 5 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சங்கங்கள் தங்கள் இருப்பை காட்டுவதற்காக இந்த பிரச்னையை எழுப்பி வருகின்றன. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தான் ஓய்வு பெற்ற பணியாளர்கள் பலருக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட்டன.
இப்போது ஓய்வு பெற்றவர்கள் எத்தனை பேருக்கு, எவ்வளவு தொகை வழங்க வேண்டும் என்பது குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், 685 பேருக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பணி ஆணை வழங்கப்பட்டது. விரைவில் மற்ற பணியிடங்களை நிரப்புவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நிரந்தரப் பணியாளர் நியமிக்க எழுத்துத் தேர்வு மற்றும் சோதனை ஓட்டம் போன்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அந்த கால தாமதத்தை தவிர்க்க அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிக்கிறோம். அப்பணியாளர்கள் நியமித்ததால் தான் தீபாவளி, பொங்கல் நேரத்தில் எந்த வித இடையூறின்றி பேருந்துகள் இயக்க முடிந்தது.