புதுக்கோட்டை:புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து 13 புதிய வழித்தடத்தில் புதிய பேருந்துகளை அமைச்சர்கள் சிவசங்கர், ரகுபதி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ஆட்சியர் அருணா, எம்எல்ஏக்கள் முத்துராஜா, சின்னதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், “பணிக் காலத்தில் இறந்து போனவர்களின் வாரிசுதாரர்கள் 36 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு பெண்கள் நடத்துநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 12வது ஊதியக்குழு பேச்சுவார்த்தையை மூன்றாண்டுக்குள் அதிமுக முடிக்காமல் போனதால், திமுக ஆட்சி அமைந்த உடன் தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி அந்த பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் சீர்குலைக்கப்பட்டிருந்த சம்பள விகிதம் மீண்டும் கருணாநிதி வழியில் மேட்ரிக்ஸ் முறையில் வழங்கி ஊதிய உயர்வை வழங்கியுள்ளோம். தற்போது தான் பேச்சுவார்த்தை முடிந்து ஒராண்டு காலம் ஆகிறது. விரைவில் அடுத்த பேச்சுவார்த்தை தொடங்க நடவடிக்கை எடுத்து, அதற்கான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பேச்சுவார்த்தை தொடங்குவோம்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு 685 பேர் பணிக்கு எடுக்கப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதற்கு முன்பாக வேலைவாய்ப்பு நடவடிக்கைகள் தொடங்கி முடிவடைகிற வரை இடைக்காலத்தில் பேருந்துகள் நின்று விடாமல் இருக்க, அவுட்சோர்சிங் முறையில் ஓட்டுநர் நடத்துநர்களை எடுத்தோம். அதிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஓய்வு பெறுகிறார்கள்.
மற்ற போக்குவரத்துக் கழகத்திலும் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பணி தொடங்கியுள்ளது. செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் அந்த பணிக்கான ஆள் எடுக்கும் நடவடிக்கை நடைபெறும். அதுவரை இந்த அவுட்சோர்சிங் முறை பயன்படுத்தப்படும். மற்ற மாநிலங்களில் நிரந்தரப் பணியாளர்களே இல்லை. தமிழ்நாட்டில் தான் நிரந்தரப் பணியாளர்கள் இருக்கின்றனர்.