தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

ETV Bharat / state

"ஆளுநர் ஆன்லைன் ரம்மியின் பிராண்ட் அம்பாசிடர்" - அமைச்சர் ரகுபதி விமர்சனம்! - Minister Regupathy

ஆளுநர் அவருடைய வேலையை மட்டும் பார்க்க வேண்டும், மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒரு தூதராக அல்லது பாலமாகத் தான் இருக்க வேண்டும், ஆனால் இங்கு அவர் அரசியல் செய்து கொண்டிருக்கிறார் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் ரகுபதி
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் ரகுபதி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது, “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தான் ஆளுநர் என்பதை மறந்துவிட்டு அரசியல்வாதி போல் செயல்பட்டு வருகிறார். ராஜ்பவன் அரசியல் பவனாக மாற்றப்பட்டு வருகிறது. கமலாலயத்துக்கு போட்டியாக ராஜ்பவன் அரசியல் செய்து வருகிறது.

ஆளுநர் ஆன்லைன் ரம்மியின் பிராண்ட் அம்பாசிடர், நீட் தேர்வுகளுக்கான பிஆர்ஓ போல செயல்பட்டு வருகிறார். காந்தி மண்டப வளாகத்தில் மதுபாட்டில்கள் கண்டறியப்பட்டுள்ளது மிகுந்த வருத்தமளிப்பதாக கூறியுள்ளார். சென்னை மாநகரில் காந்தி மண்டபம், காமராஜர் நினைவிடங்களில் பகல் நேரங்களில் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மெரினா கடற்கரையில் தினமும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுகிறது.

சுத்தத்துக்கு தமிழக அரசு முக்கியத்துவம் தருகிறது. காந்தி மண்டப வளாகத்தில் மதுபாட்டில்கள் கண்டறியப்பட்டது வருத்தமளிப்பதாக ஆளுநர் கூறியுள்ளார். மகாத்மா காந்தி சூதாட்டத்தையும் ஒழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், இந்தியா முழுவதும் பல வித சூதாட்டங்கள் நடைபெறத்தான் செய்கின்றன.

மதுவிலக்கு கொள்கைக்கு ஆதரவு:தமிழக அரசு மதுவிலக்கு கொள்கைக்கு ஆதரவான அரசு. ஆனால், மதுவை தமிழகம் மட்டும் ஒழிக்க இயலாது. அனைத்து மாநிலங்களும் சேர்ந்தால் தான் ஒழிக்க முடியும். மத்திய அரசு கையில் எடுக்க வேண்டும். தமிழகத்தில் மது இருக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. ஆனால், அருகாமையில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மது இருக்கிறது. இந்தியா முழுவதும் ஒரு திட்டம் செயல்பட்டால் மட்டுமே மது ஒழிப்பு நடைபெறும்.

இந்தியா முழுவதும் மது ஒழிப்பு முயற்சி:மற்ற மாநிலங்களில் மது ஒழிப்பு இல்லாத நிலையில், நம் மாநிலத்தில் மட்டும் மது ஒழிப்பு கொண்டு வருவது சாத்தியம் இல்லை. தமிழகத்தில் மட்டும் கொண்டு வந்தால் இங்கு கள்ளச்சாராயம் பெருகும். இதன் காரணமாக, இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா முழுவதும் மது ஒழிப்பு நடைமுறை ஏற்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சி செய்வார்.

இதையும் படிங்க:“2026 தேர்தலுக்குள் மதுக்கடைகளை மூடினால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்” - திருமாவளவன் திட்டவட்டம்!

ஆளுநர் பதவி விலக வேண்டும்:ஆளுநர் அவருடைய வேலையை மட்டும் பார்க்க வேண்டும். ஆளுநர் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஒரு தூதராக அல்லது பாலமாகத் தான் இருக்க வேண்டும். ஆனால், இங்கு அவர் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார். இந்தியாவில் இருக்கும் எந்த ஆளுநரும் பொதுக்கூட்டம் போன்று மக்களை கூட்டி பேசியதில்லை. நாங்கள் ஆளுநர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், அவர் பதவி விலக வேண்டும் எனும் நோக்கத்துடன் மட்டுமே.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு: தமிழகத்தில் இருக்கும் மதுக் கடைகள் 50 சதவீதம் மூடினாலும் அதே நிலை தான் நீடிக்கும். ஆகவே, பூரண மதுவிலக்கு தான் மக்கள் முன்னேற்றத்திற்கு உதவும். தமிழகத்தில் போதைப் பொருட்கள் உற்பத்தி செய்வது யாரும் ஆதரிக்கவில்லை. தமிழகத்தில் இருக்கும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், அண்டை மாநிலங்களில் இருந்து வரும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவது கடினம். தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும், அருகில் உள்ள கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.

தமிழகத்தில், பட்டியலினத்தவர் மீது தாக்குதல் அதிகரித்துள்ளதாக ஆளுநர் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, “குற்றப் பதிவு புள்ளிவிவரங்கள் சாதி அடிப்படையில் அவர்களுக்கு கிடைத்திருக்கலாம். ஆனால், பட்டியலினத்தவர் என்பதால் தாக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details