சென்னை:இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் சிலாய் சாகி (Silai Zaki) சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்புகள், திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்து ஆலோசணை மேற்கொண்டார்.
அதன் பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களைச் சந்தித்து கூறியதாவது, "இந்தியாவிற்கான புதியதாக பொறுப்பேற்றுள்ள ஆஸ்திரேலிய தூதர் சிலாய் சாகி (Silai Zaki) இன்று சந்தித்து இந்திய - ஆஸ்திரேலிய சுகாதார சேவைகள் பற்றி பல்வேறு கருத்துகள் இன்று பரிமாறிக்கொள்ளப்பட்டது. ஆஸ்திரேலியாவில் சுமார் 10 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அதில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.
முதியோருக்கான மருத்துவ சேவைகள், பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மருத்துவ திட்டங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ திட்டங்கள் மற்றும் உதவிகள் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும், ஆஸ்திரேலிய நட்புறவை வளர்க்கும் திட்டங்கள் குறித்தும் அவர்கள் பல்வேறு தகவல்களை கூறினர் என்றார்.