சென்னை:கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மாணவர்கள் கனவை நனவாக்க வழங்கப்பட்டு வந்த கல்விக்கடன் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது எனவும், இக்கல்வி கடனுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 10 சதவீதம் எனவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இளைஞர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கு, கல்வி மிகவும் அவசியமாகும். அவ்வாறு கல்லூரி கல்வி பயிலும் மாணவர்களுக்கு குடும்ப வருமானம் ஒரு தடையாக இருக்கக் கூடாது எனக் கருதி கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மாணவர்களின் புத்தகக் கட்டணம், தங்கும் விடுதி கட்டணம், உணவு கட்டணம், டியூசன் கட்டணம் போன்று பல்வேறு கல்விக் கட்டணங்களை செலுத்த ஏதுவாக ரூ.1 லட்சமாக வழங்கப்பட்டு வந்தது.
தற்போது அந்த கல்விக்கடன் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கல்விக்கடன் பெறும் மாணவர்கள் கல்வி பயிலும் காலம் முடிந்து 6 மாதங்கள் கழித்து வரும் 5 வருடங்களுக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும். இக்கல்வி கடனுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 10 சதவீதம் ஆகும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பட்டயப் படிப்பு மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு மட்டுமின்றி, முதுகலைப் பட்டப் படிப்புக்கும். தொழில்முறை படிப்புகளுக்கும் (professional courses) கூட்டுறவு நிறுவனங்கள் கல்விக்கடன் வழங்குகின்றன.