தமிழ்நாடு

tamil nadu

"கல்வியில் மத்திய அரசு அரசியல் செய்கிறது" அமைச்சர் அன்பில் மகேஷ் பகிரங்க குற்றச்சாட்டு! - anbil mahesh about NEP

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2024, 6:00 PM IST

தமிழ்நாட்டில் எக்காரணத்தைக் கொண்டும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளமாட்டோம் எனவும், மத்திய அரசு கல்வியில் அரசியல் செய்கிறது என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:கொடைக்கானலில் நடைபெற்று வரும் கலைஞர் ஆர்மி பயிற்சி பட்டறையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "JABIL தொழிற்சாலை மணப்பாறை சிப்காட் தொழில்பேட்டையில் அமைய உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரூ.2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் அமையுள்ள இத்தொழிற்சாலையின் மூலம் 5,000க்கும் மேற்பட்டோர் பணி வாய்ப்பினை பெற உள்ளனர். குறிப்பாக, பெண்கள் அதிகப்படியான பணி வாய்ப்புகளை பெறுவதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இதற்காக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய கல்விக் கொள்கை : தமிழ்நாட்டில் எக்காரணத்தைக் கொண்டும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம். கல்வியில் அரசியல் செய்யாதீர்கள் என்கிறார் மத்திய கல்வித்துறை அமைச்சர். ஆனால், கல்வியில் அரசியல் செய்வது அவர்கள்தான். தாய் மொழியைத் தான் நாங்கள் ஆதரிக்கிறோம் என்கிறார் மத்திய கல்வி அமைச்சர். தாய்மொழி உணர்வு என்றால் தமிழ் தான்.

ஆனால் புதிய கல்விக் கொள்கையில் என்ன செய்கிறார்கள் என்பதை மத்திய அரசின் அறிக்கையின் மூலமே அறியலாம். குறிப்பாக, அறிவியல் நூல்களையும், தொழில் சார்ந்த நூல்களையும், பல்வேறு துறை சார்ந்த நூல்களையும், தமிழில் மொழி பெயர்த்து வழங்கும் திட்டத்தையும் நாம் செயல்படுத்தி வருகின்றோம்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் வழியாக நமது மொழி உரிமையை பாதுகாத்து வருகின்றோம். அண்ணாவின் இரு மொழி கொள்கையைத் தான் நாம் பின்பற்றி வருகின்றோம். இதுபோன்ற வரலாறுகள் நமக்கு இருக்கும் நிலையில் மத்திய அமைச்சர் தாய்மொழி குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை.

நிதியை நிறுத்துவதன் வழியாக 15,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் மத்திய அரசு சிக்கலை ஏற்படுத்துகின்றது. புதிய கொள்கைகளை ஏற்றுக் கொண்டால்தான் நிதி தர முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் என்னிடம் நேரடியாகவே தெரிவித்தார்.

எக்காரணத்தைக் கொண்டும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் நிலையில் தமிழ்நாடு அரசு இல்லை. கொள்கையை விட்டுக் கொடுத்து நிதியை பெற வேண்டிய தேவையும் தமிழ்நாடு அரசுக்கு இல்லை. இது போன்ற சிக்கல்களை மத்திய அரசு ஏற்படுத்தினாலும், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு இதை எல்லாம் முறியடித்து தொடர்ந்து கல்வியில் சாதனை புரியும். கல்வியில் என்றும் நாங்கள் அரசியல் செய்ய விரும்புவதில்லை.

கொடைக்கானல் பகுதியில் உள்ள பள்ளிகள் குறித்து மாவட்ட பள்ளிக்கல்வித்துறை முதன்மை அலுவலரிடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளோம். இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று விரைவில் புதிய மேல்நிலைப் பள்ளியும், மலைப்பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதியையும் ஏற்படுத்திக் கொடுக்க உடனடி நடவடிக்கையை மேற்கொள்வோம்.

இதையும் படிங்க :போராட்டம் நடத்திய சென்னை பள்ளி ஆசிரியர்களுக்கு பறந்த மெமோ! மாணவர்களுக்கு சரியாக பாடம் நடத்தவில்லையாம் - Teachers Protest issue

ஆசிரியர்கள் போராட்டம் :ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை பொறுத்த வரையில் அவர்களிடம் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறோம். அவர்கள் 31 கோரிக்கைகள் வைத்ததில், 12 வகையான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான எழுத்துபூர்வமாக கொடுத்துள்ளோம். ஆசிரியர்கள் வைக்கும் கோரிக்கையை பார்த்து, காதை மூடிக்கொண்டு செல்லும் கூட்டம் கிடையாது. அவர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மகாவிஷ்ணு விவகாரம் : பள்ளிகளுக்கு யார் வர வேண்டும் என்பது குறித்த வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். பள்ளிக்குள் வந்த பின்னர் தலைமை ஆசிரியர் தான் பொறுப்பு. மூடநம்பிக்கை குறித்து பேசிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details