தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் கல்லூரி விவகாரம் - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு! - MADRAS HIGH COURT

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில் கல்லூரி கட்டுவதற்கு, கொளத்தூர் சோமநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு வழங்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2025, 5:44 PM IST

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில் கலை, அறிவியல் கல்லூரி அமைப்பதற்காக கொளத்தூர் சோமநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு வழங்குவதை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பாக கலை, அறிவியல் கல்லூரி அமைப்பதற்காக, கொளத்தூர் சோமநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான 2.50 ஏக்கர் நிலத்தை 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பு ஆணையை ரத்து செய்யக்கோரி, டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் இன்று (பிப் 25) விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் டி.ஆர்.ரமேஷ், "விதிகளை பின்பற்றாமல் கொளத்தூர் சோமநாத சுவாமி கோயில் நிலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. தற்போதைய வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில், இந்த நிலத்திற்கு மாதம் ரூ.5 லட்சத்து 12 ஆயிரம் வாடகை நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆனால்,ரூ. 3 லட்சத்து 19 ஆயிரம் மட்டுமே வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கோயிலுக்கு மாதத்திற்கு ரூ.1 லட்சத்து 93 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது." என்று வாதிட்டார்.

இதையும் படிங்க:லஞ்சம் வாங்கிய முன்னாள் சப்-இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டுகள் சிறை!

இதனையடுத்து, கொளத்தூர் சோமநாத சுவாமி கோயில் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மற்றும் இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் அருண்நடராஜன் ஆகியோர் ஆஜராகி, “சோமநாத சுவாமி கோயில் நிலம் 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. குத்தகை ஒப்பந்தம் செய்த கடந்த 2022 ஆம் ஆண்டு, அமலில் இருந்த வழிகாட்டு மதிப்பீட்டின் அடிப்படையில், மாதத்திற்கு ரூ.3 லட்சத்து 19 ஆயிரம் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகை மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் வரும் அக்டோபர் மாதம் வாடகை மறு நிர்ணயம் செய்யப்படும். தொடர்ந்து, குத்தகை தொடர்பான ஒப்பந்தம் பதிவு செய்யப்படும்." என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details