விஜயலட்சுமி அளித்த புகார்: சீமான் வழக்கில் 19 ஆம் தேதி தீர்ப்பு - சென்னை ஐகோர்ட் அதிரடி! - NTK SEEMAN SEXUAL ABUSE CASE
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யக்கோரிய வழக்கில், 19ஆம் தேதி விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற தெரிவித்துள்ளது.
நடிகை விஜயலட்சுமி,நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் (ETV Bharat Tamil Nadu)
சென்னை:திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை ரத்து செய்யக்கோரி, சீமான் தொடர்ந்த வழக்கை வரும் 19 ஆம் தேதி விசாரித்து அன்றே உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியன் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், கடந்த 2011ஆம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளது. இதையடுத்து ,வழக்கை ரத்து செய்வது தொடர்பாக நடிகை விஜயலட்சுமி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு வழக்கு பட்டியலிடப்படாமல் தொடர்ந்து நிலுவையில் இருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று (பிப்ரவரி 13) மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, இந்த வழக்கு இத்தனை ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், இது ஐ.பி.சி 376 பிரிவில் பதிவு செய்யப்பட்ட (பாலியல் வன்கொடுமை) வழக்கு என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதனையடுத்து, வழக்கை பிப்ரவரி 19ஆம் தேதி ஒத்திவைத்த நீதிபதி, அன்றும் விசாரணை தொடங்கவில்லை என்றால் அன்றே இந்த வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.