தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊட்டி ரேஸ் கோர்ஸ் விவகாரம்; அரசின் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது.. சென்னை உயர் நீதிமன்றம்! - Ooty Race Course Case

Madras High Court: உதகை குதிரை பந்தய மைதானத்தை அரசு மீட்கும் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 10:20 PM IST

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:உதகையில் வருவாய்த் துறைக்குச் சொந்தமான 52.34 ஏக்கர் நிலத்தை கடந்த 1977ஆம் ஆண்டு முதல் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் குத்தகைக்கு எடுத்து குதிரை பந்தயம் மைதானமாக பயன்படுத்தி வந்தது. தொடக்கத்தில் முறையாக குத்தகை செலுத்தி வந்த ரேஸ் கிளப் நிர்வாகம் பின்னர் குத்தகை தொகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் குத்தகை தொகையைச் செலுத்தாமல் இருந்து வந்தது.

கடந்த 23 ஆண்டுகளில் ரேஸ் கிளப் நிர்வாகம் ரூ.820 கோடி குத்தகை தொகை செலுத்தாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு குதிரை பந்தயம் மைதானத்தை மீட்க உயர் நீமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், ரேஸ் கிளப் நிர்வாகம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமையிலான அமர்வு, ரேஸ் கிளப் சார்பாக தாக்கல் செய்யபட்டிருந்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனையடுத்து, இன்று காலை உதகை கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறையினர் குதிரை பந்தயம் மைதானத்தை மீட்டனர். அங்கு அரசுக்குச் சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு, தோட்டக்கலைத்துறைக்கு அந்த நிலத்தை ஒப்படைத்தனர்.

அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் என்.செந்தில்குமார் அமர்வு முன்பு இன்று காலை அவசர முறையீடு செய்தது. நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதற்கு அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், ரூ.820 கோடி ரூபாய் குத்தகை தொகை நிலுவையில் உள்ள நிலையில், அரசின் நடவடிக்கையில் தலையிடக்கூடாது என்றும், நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டதாகவும் சுட்டிக்காட்டினார். இதையடுத்து நீதிபதிகள் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்தின் முறையீட்டை நிராகரித்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசிய வழக்கு; தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு! - Palanivel Thiagarajan

ABOUT THE AUTHOR

...view details