தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

ETV Bharat / state

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி.. தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - RSS Procession

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனைத்து இடங்களிலும் அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:தமிழ்நாடு முழுவதும் விஜயதசமியை முன்னிட்டு, அக்.6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு போலீசார் அனுமதி வழங்காததால், 58 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வழக்கு தொடர்ந்தனர்.

முன்னதாக, இந்த வழக்கில் அரசுத் தரப்பில், மொத்தம் 58 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. 16 இடங்களைத் தவிர மற்ற இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்கள் பரிசீலனையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. உடனே நீதிபதி அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (அக்.1) நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 58 இடங்களில் 6 இடங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆவடி போலீஸ் கமிஷ்னர் கட்டுப்பாட்டில் உள்ள மாங்காடு, கொரட்டூர், தாம்பரம் போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் உள்ள மேடவாக்கம், சேலையூர், கோவை ரத்தினபுரி, தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் ஆகிய இடங்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: "விசாரணை என்ற பெயரில் ஆசிரியர்களை மிரட்டுவதா?" - பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டனம்!

மேலும், மாங்காடு, ரத்தினபுரி ஆகிய இடங்களில் உள்ள அமிர்தா வித்யாலாயா பள்ளி நிர்வாகமும், கொரட்டூரில் நல்லிக்குப்புசாமி விவேகானந்தா பள்ளி நிர்வாகமும் ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டத்தை தங்கள் பள்ளி வளாகத்தில் நடத்த அனுமதி வழங்கவில்லை. மேடவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணி நடைபெறுகிறது. சேலையூரில் பேருந்து செல்லும் மெயின் ரோட்டில் கூட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. குலசேகரப்பட்டினம் தசரா பண்டிகையை முன்னிட்டு சாயர்புரத்தில் அனுமதி வழங்கவில்லை என்றும் விளக்கம் அளித்தனர்.

RSS ஊர்வலத்துக்கு அனுமதி:இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "ஒரு குறிப்பிட்ட மதத்தினர் வாழும் பகுதி, எதிர் கொள்கை நிலைப்பாடு கொண்ட மக்கள் வாழும் பகுதி என்று கூறி, ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க மறுக்கக்கூடாது. பொதுச்சாலை என்பது பொதுமக்களுக்குத்தான். தனி நபர்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை. அதனால், இந்த காரணத்தைக் கூறி அனுமதி மறுக்கக்கூடாது.

ஏற்கனவே, ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து நிபந்தனையுடன் கடந்த ஜனவரி மாதம் விரிவாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், அந்த நிபந்தனையுடன் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும். எதிர்காலத்தில் அனுமதி மறுக்கவோ? புதிய நிபந்தனைகளை விதிக்கவோ? கூடாது. மேலும், மாங்காடு, ரத்தினபுரி, கொரட்டூர் பகுதிகளில் பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி கடிதம் வாங்கிக் கொடுத்தால், அங்கு ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கும், பொதுக்கூட்டத்துக்கும் போலீசார் அனுமதி வழங்க வேண்டும்.

அதேபோல், சாயர்புரத்தில் வருகிற 20ஆம் தேதி ஊர்வலம் செல்ல முடிவு செய்துள்ளதால், அன்று அனுமதி வழங்க வேண்டும். கடந்த ஆண்டு சேலையூரில் ஊர்வலம் நடத்தவில்லை. அதனால், கடந்த ஆண்டு நடந்த இடமான சிட்லபாக்கத்தில் அனுமதி கேட்டால், அவர்களுக்கு போலீசார் அனுமதி வழங்க வேண்டும். மேடவாக்கத்தில் மாற்று வழியில் ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details