சென்னை:பச்சையப்பன் கல்லூரியில் திமுக எம்.பி. ஆ.ராசா கலந்து கொண்ட நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளராக இருந்த பேராசியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பச்சையப்பன் கல்லூரி வாசகர் வட்டத்தின் 7ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ‘சொல்’ ஆண்டு மலர் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 7 ஆம் தேதி கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா பங்கேற்று உரையாற்றியிருந்தார்.
இந்நிலையில், பச்சையப்பன் வாசகர் வட்டத்தின் பொறுப்பாளராக இருந்த முனைவர் ஆ.தே.ரேவதி, கல்லூரி நிர்வாகத்தால் சமீபத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி முனைவர் ரேவதி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'நிகழ்ச்சி நடத்த கல்லூரி அனுமதி அளித்த பின்னரே நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் அனுமதி பெறாமல் நிகழ்ச்சி நடத்தியதாக தவறான காரணத்தைக்கூறி தாம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறேன்." என்று தமது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பவானி சுப்ராயன், 'முனைவர் ரேவதியின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து பச்சையப்பன் கல்லூரி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்பீல் வழக்கை நீதிபதிகள் ஆர் சுப்பிரமணி, குமரப்பன் ஆகியோர் விசாரித்து தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.