தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு விமான நிலையமே தற்போது தற்காலிக சர்வதேச விமான நிலையமாக உள்ளது.. ஆனந்த் அம்பானி இல்ல விழா குறித்து கார்த்தி சிதம்பரம் காட்டம் - parliament election 2024

Karthi Chidambaram MP: திமுக - காங்கிரஸ் கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும், பிரதமர் மோடி தமிழகத்திற்கு எவ்வளவு முறை வந்தாலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

Karthi Chidambaram MP
கார்த்தி சிதம்பரம் எம்பி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 3, 2024, 8:58 PM IST

Updated : Mar 3, 2024, 9:20 PM IST

கார்த்தி சிதம்பரம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், மழவராயன் பட்டியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து, ஆறு லட்சம் ரூபாய் மதிப்பில் கலையரங்கம் கட்டப்பட்டது. இதனை சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்பி கார்த்தி சிதம்பரம், “பாஜக கூட்டணி வைக்காத மாநிலங்களில், தங்களுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். வேட்பாளர் பட்டியலை முன்கூட்டியே அறிவிப்பதால், அவர்கள் முந்திச் செல்வதாக அர்த்தம் கிடையாது. ஹால் டிக்கெட் முன்பே கொடுத்து விட்டதால், அவர்கள் தேர்வு எழுத முடியாது. தேர்வு நேரத்தில் மட்டும்தான் ஹால் டிக்கெட் பயன்படுத்தி தேர்வு எழுத முடியும்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி இழுபறி: திமுக கூட்டணிக்குள் எந்த விதமான குழப்பமும் கிடையாது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் சுமூக தீர்வு ஏற்படும். திமுக - காங்கிரஸ் கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும். திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. அதிமுக தங்களுடைய கட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று என்னுடைய விருப்பம்.

தமிழ்நாட்டில் பாஜக ஓட்டு சதவீதம்: பாஜகவிற்கு வாக்கு சதவீதம் எவ்வளவு என்பதை மே மாதம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் தெரிந்துவிடும். எதற்காக இவ்வளவு அவசரப்படுகிறார்கள் என்பது தெரியவில்லை.

கண்டா வரச் சொல்லுங்க போஸ்டர்: என்னைத்தான், தற்போது நீங்கள் பார்த்து விட்டீர்களே. நாடாளுமன்ற உறுப்பினர் தங்களுடைய கடமையைச் செய்கிறார்களா, இல்லையா என்பதைப் பார்க்க வேண்டுமே தவிர, அவர்கள் எல்லா தெருவுக்கு வந்தனரா, எல்லா வீதிக்கு வந்தனரா என்று பார்ப்பது சிரமமான காரியம் என்றார்.

பிரதமர் மோடி வருகை: பிரதமர் மோடி தமிழகத்திற்கு எவ்வளவு முறை வந்தாலும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. பாஜக தமிழகத்தைப் பொறுத்தவரை நிராகரிக்கப்பட வேண்டிய கட்சி. காங்கிரஸ் கட்சி இருந்தபோது சராசரி பொருளின் விலை என்ன என்பதையும், தற்போது சராசரி பொருளின் விலை என்ன என்பதையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

அனைத்து பொருட்கள் விலையும் தற்போது அதிகரித்துவிட்டது. இந்தி பேசாத மாநிலங்களில் பாஜக வளர்ச்சி அடையவில்லை. இந்தி பேசும் மாநிலங்களில் இந்துத்துவா கொள்கையால் அவர்களுக்கு செல்வாக்கு உள்ளது. பல்லடம் மற்றும் திருநெல்வேலியில் பாஜக பொதுக்கூட்டத்திற்கு வந்தது, தமிழகத்தைச் சேர்ந்தவர்களா என்பதே சந்தேகமாக உள்ளது. இங்குள்ள வாக்காளர்கள்தானா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சி சீட்டு: ஒவ்வொரு கட்சியும், தலைமையும் யார் வேட்பாளர் என்பதை முடிவு செய்கின்றனர். கட்சிக்குள் ஒருவருக்கு சீட்டு வேண்டும், ஒருவருக்கு சீட்டு கொடுக்கக் கூடாது என்பது கூறுவது வாடிக்கையான ஒன்று.

அதானி குடும்ப திருமணத்திற்கு ஒரு விமான நிலையத்தையே தற்காலிகமாக சர்வதேச விமான நிலையமாக, விதிமுறை மீறி இந்த அரசு மாற்றி உள்ளது. இதிலிருந்து அவர்கள் எந்த நோக்கத்தில், யாருக்காக செயல்படுகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிட்டது.

நாங்கள் பலமுறை மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருந்தோம். அதற்கு வணிக ரீதியாக தற்போது சாத்தியமில்லை என்று பதில் கூறினர். தற்போது அவர்கள் எடுத்திருக்கும் முடிவிலிருந்து, அவர்கள் யாரை சார்ந்து உள்ளனர் என்பது தெளிவாக தெரிய உள்ளது. பாஜக 370 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று கூறுவது ஆசை மட்டும் அல்ல, பேராசையாகும்.

போதைப்பொருள்:போதைப்பொருள் புழக்கம் மற்றும் விற்பனை என்பது தமிழகத்தை குறி வைத்து மட்டும் கூறக்கூடாது. போதைப்பொருள் விற்பனை மற்றும் இறக்குமதி என்பது இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. அதைக் கட்டுப்படுத்த வேண்டும்".

இதையும் படிங்க:என்னுடைய விருப்பு, வெறுப்பு எதுவும் இல்லை.. பிரதமர் மோடி என்ன சொன்னாலும் அதற்குக் கட்டுப்படுவேன் - அண்ணாமலை!

Last Updated : Mar 3, 2024, 9:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details