சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு செயல்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை ஓட்டேரி அருள்மிகு படவேட்டம்மன் திருக்கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி கே சேகர்பாபு, "திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பொதுமக்கள், பக்தர்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி முதன்மையான அரசாக திகழ்கிறது. இதுவரை 2504 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. 1000 ஆண்டுகளுக்கும் மேலான 49 திருக்கோயில்களின் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. ஆதி படவேட்டம்மன் திருக்கோயில் குடமுழுக்கு வருகிற மார்ச் மாதம் 3ம் தேதி நடைபெற உள்ளது. இதுவரை ரூ.7154 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தாண்டு இறுதிக்குள் 300-க்கும் மேற்பட்ட கோயில்களின் குடமுழுக்கு நடைபெற உள்ளன.
திருப்பரங்குன்றம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இந்து அமைப்பினர் என குறிப்பிட வேண்டாம் பாஜகவினர் என்று தான் குறிப்பிட வேண்டும். இந்த ஆட்சிக்கு ஒரு அபாயத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். நேற்றைய போராட்டம் ஒரு தேவையற்ற போராட்டம். அந்தப் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள், இந்துக்கள் போன்ற மக்களே இது தேவையற்ற ஒரு பிரச்சனை என்று கூறியிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: வனத்துறை எச்சரிக்கையை மீறி சென்ற ஜெர்மனி சுற்றுலா பயணி - யானை தாக்கி உயிரிழப்பு!
இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்கள் அண்ணாமலை, எச் ராஜா போன்றோர் வட மாநிலத்தைப் போன்று சர்ச்சையை ஏற்படுத்த நினைக்கிறார்கள். அவர்கள் இரட்டை நாக்கு உடையவர்கள். இனத்தால், மதத்தால் மக்களை பிளவுபடுத்த நினைக்கின்றனர். எங்கு கலவரம் ஏற்பட்டாலும் இரும்பு கரம் கொண்டு அடக்க முதலமைச்சர் தயாராக இருக்கிறார். பெரியார் மண்ணில் திராவிட மண்ணில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஒரு காலமும் முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார். திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர், இந்துகள் மாமா, மச்சானாக, சகோதரத்துவம் கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் கோயில் பிரச்சனையை எடுத்ததால் பாரதிய ஜனதா கட்சிக்கு எந்த வாக்கும் கிடைக்கப்போவதில்லை. இதை வைத்து அரசியல் ஆக்க வேண்டாம். இந்த விவகாரத்தை வைத்து அரசியலில் குளிர்காய நினைக்கிறார்கள். இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு செயல்படும். துறை அமைச்சர் என்ற முறையில் விரைவில் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்ல உள்ளேன். கடந்த காலங்களில் சரியான திட்டமிடல் இல்லை. அதனால் தான் திட்டங்கள் காலதாமதம் ஆகிறது. வருகிற ஏப்ரல் - மே மாத இறுதிக்குள் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்" என தெரிவித்தார்.