சென்னை: வார இறுதி நாட்கள் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கூடுதல் சிறப்பு பேருந்துகள்: இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தியில்,''வரும் (07/02/2025) வெள்ளிக்கிழமை, (08/02/2025) சனிக்கிழமை மற்றும் (09/02/2025) ஞாயிறுக் கிழமை வார இறுதி விடுமுறை நாட்கள், முகூர்த்தம் மற்றும் தைபூசம் விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு (07/02/2025) வெள்ளிக்கிழமையன்று 380 பேருந்துகளும், (08/02/2025) சனிக்கிழமையன்று 530 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு (07/02/2025) வெள்ளிக் கிழமை அன்று 60 பேருந்துகளும் (08/02/2025) சனிக்கிழமை அன்று 60 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பயணிகள் முன்பதிவு: பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 07/02/2025 அன்று 20 பேருந்துகளும் 08/02/2025 அன்று 20 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும் , ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது .
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 11,336 பயணிகளும் சனிக்கிழமை 634 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 8,864 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலமும் முன்பதிவு செய்யலாம். சிறப்பு பேருந்துகளை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் சிறப்பு பேருந்து வசதிகளை பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்,"என தெரிவிக்கப்பட்டுள்ளது.