கள்ளக்குறிச்சி: பெண் கிராம நிர்வாக அலுவலர் மீது சாணியை வீசி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்ற பெண் உதவியாளரை போலீசார் தேடி வருகின்றனர். உள்ளூரைச் சேர்ந்த பெண் உதவியாளர் விஏஓ மீது கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் வடக்கனந்தல் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த வடக்கனந்தல் ஊராட்சியின் கிராம நிர்வாக அலுவலர் தமிழரசி (Village Administrative Officer). இவருடைய உதவியாளர் சங்கீதா. உள்ளூரைச் சேர்ந்த சங்கீதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு அலுவலக கணக்கு புத்தகத்தை தனது வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார்.
இதனை தமிழரசி கண்டித்ததால், அவரை சங்கீதா அலுவலகத்தில் வைத்து பூட்டியுள்ளார். இதுதொடர்பாக தமிழரசி அளித்த புகாரில் சங்கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று (பிப்.5) கிராம நிர்வாக அலுவலர் தமிழரசி பணியில் இருந்தபோது, அலுவலகத்திற்கு வந்த சங்கீதா விஏஓ முகத்தில் மாட்டுச்சாணம் வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: 'டெண்டர் எடுத்து நான்தான் கட்டுவேன்'.. ஊர் தலைவி தலையீட்டால் மருத்துவமனை கட்டுமான பணி முடக்கம்!
இந்த சம்பவம் தொடர்பாக தமிழரசி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய சங்கீதாவை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் தமிழரசி கூறுகையில், ''ஆபீசில் இருந்தேன்.. திடீரென பின்பக்கமாக பார்வையில் தெரியாத மாதிரி உள்ளே வந்த சங்கீதா கவரில் இருந்த மாட்டு சாணத்தை எடுத்து மூஞ்சியில் அடித்ததோடு என்னை இழுத்து கீழே போட்டு தாக்கினார். 'இது என்னுடைய ஊரு.. நீ எப்படி வேலை செய்கிறாய் என்று பார்க்கிறேன். யார் வந்து உன்னைக் காப்பாற்றுவார்கள் என்று பார்க்கிறேன். உன்னை கொல்லாமல் விடமாட்டேன்' எனச் சொல்லி கதவை மூடிக்கொண்டு தாக்க ஆரம்பித்தார்'' என தமிழரசி கூறினார்.
பெண் கிராம நிர்வாக அலுவலர் பட்டப்பகலில் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.