தஞ்சாவூர்: கும்பகோணத்தில் உள்ள டாக்டர் அன்னிபெஸன்ட் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் பணியாற்றி வந்தவர் தேவநாதன் (51). திருவாரூர் பழையவலம் பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நகைக்கடையில் தள பராமரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், இவர் கும்பகோணம் டிஎஸ்ஆர் பெரிய தெருவில் உள்ள தனியார் வளாகத்தின் 2வது தளத்தில் உள்ள அறையில் தங்கி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி, தேவநாதன் பணிக்குச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து நகைக்கடை மேலாளர் தேவநாதனின் அலைபேசிக்கு தொடர்பு கொண்டபோது, அவர் பதிலளிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதனிடையே, நேற்று (பிப்.14) தேவநாதனின் உறவினர்கள், அவருக்கு அலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். ஆனால், இணைப்பு கிடைக்காமல் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. பல முறை அவர்கள் முயற்சி செய்தும், இதே நிலை நீடித்துள்ளது. அதன் பின்னர் சந்தேகம் அடைந்த தேவநாதனின் உறவினர்கள், அவர் பணியாற்றும் நகைக்கடையின் அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.
அப்போது, அவர் இரண்டு நாட்களாக பணிக்கு வரவில்லை என தகவல் அளித்துள்ளனர். பின்னர், அவர் பணிபுரியும் அலுவலகத்தினர், தேவநாதன் தங்கியிருக்கும் அறைக்குச் சென்று நேரில் பார்த்தபோது, அறை உட்புறம் தாழிடப்பட்டு இருந்துள்ளது. கதவை தட்டியும் திறக்காததால், இது குறித்து காவல் துறைக்கும், தேவநாதனின் குடும்பத்தினருக்கும் தகவல் அளித்துள்ளனர்.