தமிழ்நாடு

tamil nadu

பெண் என்பதால் இன்ஜினியரிங் படிக்க மறுப்பு.. ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நெகிழ்ச்சி பதிவு! - Aditya L1 director Nigar Shaji

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 28, 2024, 6:54 PM IST

Nigar shaji at convocation: தான் பெண் என்ற ஒரே காரணத்திற்காக தனக்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாக இஸ்ரோவின் ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகார் ஷாஜி தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசினார்.

அதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகார் ஷாஜி
அதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகார் ஷாஜி (Credits - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: நெல்லை மேலப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அன்னை ஹாஜிரா தனியார் பெண்கள் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆதித்யா எல் 1 (Aditya L1) திட்ட இயக்குனர் நிகார் சாஜி மற்றும் கோலாலம்பூர் மெட்ரோ செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அப்துல் காதர் பின் அசன் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் தேர்ச்சி பெற்ற 260 மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, இந்திய விண்வெளி துறையின் ஆதித்யா எல் 1 திட்ட இயக்குனர் நிகார் ஷாஜி விழாப்பேருரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், "பெண் கல்வி மற்றும் அதிகாரம் ஆகியவை சமூகத்தை வடிவமைக்கின்றன.

நூற்றாண்டுகளுக்கு முன்னால் இருந்து ஆண்களுக்கு பின்தங்கியவர்களாகவே பெண்கள் பல வழிகளில் இருந்துள்ளனர். வாக்களிப்பதற்கு, சொந்தமாக சொத்துக்கள் வாங்குவதற்கு, சுயதொழில் அல்லது சொந்தமாக பணி செய்வதற்கு பெண்கள் அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தனர்.

என்னுடைய அனுபவத்தில் ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன். நான் பெண் என்ற ஒரே காரணத்திற்காக மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. பெண்களுக்கு பல பகுதிகளில் தற்போதும் அதிகாரம் மற்றும் அனுமதி இல்லாமல் இருந்து வருகிறது.

ஒரு ஆண் கல்வி அறிவைப் பெறும் பொழுது தனிநபரின் கல்வியறிவு உயர்கிறது. அதே, ஒரு பெண் கல்வி அறிவை பெறும்போது ஒரு குடும்பத்தின் கல்வி அறிவு பெருக்கம் அடைகிறது. தற்போதைய நிலையில், பெண்களின் கல்வி அறிவு 77 சதவீதமாகவும், அதே நேரத்தில் ஆண்களின் கல்வியறிவு 85 சதவீதத்திற்கு மேலாகவும் இருந்து வருகிறது.

கல்வி என்பது பெண்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் பாதுகாப்பிற்காக அதிகம் பயன்படுகிறது. சமத்துவமின்மை செயல்பாட்டை கல்வி குறைப்பதுடன் குடும்பத்தின் நிலையை மேம்படுத்துவதற்கான வழிமுறையை வகுக்கிறது. படித்த பெண்கள் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றனர். பெண்களின் திறன் மற்றும் மேம்பாட்டின் மூலமே இந்தியா வளர்ந்த நாடாக மாற முடியும்" எனக் கூறினார்.

தொடர்ந்து விக்ரம் சாராபாய் குறித்து பேசிய அவர், "பேராசிரியர் விக்ரம் சாராபாய், திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள சிறிய மீன்பிடி குக்கிராமமான தும்பாவில் விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி பணிக்கான நிறுவனத்தை அமைப்பதற்காக இடத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டார்.

அங்கு பழமையான மற்றும் புராதனமான புனித மேரி மேக்தலின் தேவாலயம் இருந்தது. இந்த தேவாலயத்தின் பேராயரிடம் விக்ரம் சாராபாய் விண்வெளி துறை தொடர்பான நோக்கங்களை விளக்கி தெரிவித்தார். அங்குள்ள தேவாலய மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் இடம் கொடுக்க கிடைத்தது.

அதன் பின்பு, அங்குள்ள தேவாலயம் ராக்கெட் வடிவமைப்பு மையமாகவும், பேராயர் வீடு விஞ்ஞானிகளின் அறையாகவும் மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தான் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் மற்றும் பல விண்வெளி மையங்கள் உருவாக தொடங்கியது. இன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறை உலக நாடுகளும் மதிக்கும் மிகப்பெரிய விண்வெளி மையமாக செயல்படுகிறது.

இந்திய தொழில்நுட்பங்கள் தற்போது உலக அளவில் நிரூபணமாகி வருகின்றன. நமது நாட்டில் ஒரு தேவாலயம் அறிவியல் ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டு, அதன் மூலம் பல்வேறு சாதனைகள் நிகழ்ந்துள்ளது. சமூகத்தின் வடிவமைப்பை மதம் மற்றும் ஆன்மீக அமைப்பின் சிறந்த கூற்றுகளால் மாற்ற முடியும் என்பது அதன் மூலம் கிடைக்கப் பெற்றுள்ளது" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:பொறியியல் கலந்தாய்வு; முதல் சுற்றில் 30,699 பேருக்கு அழைப்பு

ABOUT THE AUTHOR

...view details